கிளாம்பாக்கம் ஆட்டோவில் ஏறும் முன்பாக.. சர்டிபிகேட் செக்.. புதிய கட்டுப்பாடுகள் விதித்த போலீசார்!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பேருந்து நிலையம் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு தாம்பரம் போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண் ஒருவர் பேருந்திற்காக காத்திருந்த நிலையில் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே அந்த இளம்பெண்ணை விட்டு விட்டு ஆட்டோவில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர் தயாளன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளாம்பாக்கம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் இரவு நேரத்தில் பெண்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது காவல்துறை.
காவல்துறையினரிடம் அடையாள அட்டை பெற்ற பின்பே ஆட்டோக்களை ஓட்ட முடியும் எனவும், வாகன பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும்படி இருக்க வேண்டும் என தாம்பரம் காவல்துறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தை சுற்றி ANPR சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்
* ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும்.
* கிளாம்பாக்கத்தை சுற்றி ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பூத் அமைக்கப்பட உள்ளது.
* காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
* கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
* வெளி ஆட்டோக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications