ஆம்ஸ்ட்ராங் கொலை.. திடீர் மெசேஜ்.. சம்பவம் செந்திலை பிடிக்க துபாய் பறக்கும் போலீஸ்
சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்து 100 நாட்கள் ஆகப்போகின்றன. இன்னும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்பவம் செந்தில் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அவரை கைது செய்ய போலீஸ் துபாய் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜுலை மாதம் ஆம் தேதி பெரம்பூர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசியளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தற்போது வரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 28 பேர் மட்டுமல்லாமல், சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்ற பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல்படி, முதல் குற்றம் சாட்டப்பட்டவராக பிரபல தாதா நாகேந்திரன், இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவராக சம்பவம் செந்தில், மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவராக நாகேந்திரனின் மகன் அசுவத்தாமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
500 தடயங்கள், 200 சாட்சியங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் மீதும் தனித்தனியாக புலன் விசாரணை அறிக்கை, சாட்சிகள், ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விரைவில் கைது செய்யப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை, சாட்சிகளிடம் விசாரணை, விசாரணை அதிகாரியின் சாட்சி ஆகியவை நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
பிரபல ரவடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்கு தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்திருந்தார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாகேந்திரன், சம்போ செந்தில் என ஆகிய ரவுடி டீம் வேலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் திருவேங்கிடம், சீஸிங் ராஜா ஆகிய இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதில் மூளையாக செயல்பட்ட சம்பவம் செந்தில் கைது செய்யப்படாமல் இருக்கிறார். இது காவல்துறைக்கும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள சம்பவம் செந்திலை கைது செய்ய காவல்துறை வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே சம்பவம் செந்திலை பிடிப்பதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் செந்திலை தேடி வருகின்றனர். இந்நிலையில் செந்தில் துபாயில் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸ் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு சில நாள்களில் சிறப்புப் படை காவல்துறை விமானம் மூலம் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications