தோல்வி பயம்... வருமான வரி சோதனைக்காக மத்திய அரசை தூண்டிவிடும் அதிமுக- துரைமுருகன் கண்டனம்
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால் மத்திய அரசை வருமான வரி சோதனைக்காக அதிமுக அரசு தூண்டிவிடுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலை, சென்னை உட்பட 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனை நடவடிக்கைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் களத்தில் திமுகவை வீழ்த்த முடியாது என்பதற்காக இத்தகைய வருமான வரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த வருமான வரி சோதனைகளில் எதுவுமே சிக்கவில்லை. இந்த சோதனையே உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதுதான்.
வருமான வரி சோதனை நடத்தினால் அச்சப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைக்கிறது மத்திய அரசு. அதனால்தான் ஸ்டாலின் தங்கியிருந்த இடத்திலும் கூட வருமான வரி சோதனை நடத்தி இருக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால் மததிய அரசை வருமான வரி சோதனை நடத்துமாறு அதிமுக அரசுதான் தூண்டி விடுகிறது. இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்றார் துரைமுருகன்.