Pollachi News: இதில் கூட அரசியலா? கயவர்களுக்கு தேவை கடும் தண்டனைதான் .. செய்யுமா கட்சிகள்! !
Recommended Video

சென்னை: ஆக மொத்தம் பொள்ளாச்சி விஷயத்தைகூட நம் ஆட்கள் அரசியலாக்கி விட்டார்கள்... எத்தனை பேர் இறந்தால் என்ன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டால் என்ன... புல்வாமா தாக்குதலும், பொள்ளாச்சி கற்பழிப்பும் எல்லாமே அரசியல்வாதிகளுக்கு ஒன்றுதான் போலும்!
பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. ஆனால் இந்த விஷயம் முழுவதுமாக வெளியே தெரியவில்லை. இதை வெட்ட வெளிச்சமாக்கியது முதன்முதலில் கொங்கு மண்டலம் ஈஸ்வரன்தான்.
எப்போதுமே பொதுவிஷயங்களை கையில் எடுக்கும் ஈஸ்வரன் ஒரு பாலியல் சம்பவத்தை பற்றி ஏன் இப்படி அறிக்கை வாயிலாக கொதித்து பேசுகிறார் என்று ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. அவரது முதல் அறிக்கையிலேயே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருந்தார். இதன்பிறகுதான் மெல்ல மெல்ல பொள்ளாச்சி கொடூரம் வெளியே வந்தது. இதனை தொடர்ந்துதான் திமுக அங்கு முற்றுகை போராட்டமும் நடத்தியது.

அரசியல் ஆதாயம்
திருநாவுக்கரசு ஆடியோ, வீடியோ வெளியிட்டபோதுகூட வாய்திறக்காத கட்சிகள் எல்லாம், கடந்த 2 நாட்களாக இதை தீவிரப்படுத்துவது ஏன்? என்றும் இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பார் நாகராஜ்
கொடூரன் பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வீசி எறிந்தது அதிமுக. இதைதவிர, சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளின் மீது பாய்ந்தது குண்டர் சட்டம். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, கொஞ்ச நேரத்திலேயே சிபிஐக்கும் மாற்றி என அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்தது ஆளும் அரசு! எல்லாமே கடுமையான எதிர்ப்புகள், அழுத்தங்களுக்குப் பிறகுதான் நடந்தன.

கமலின் அணுகுமுறை
ஆனால் இந்த விவகாரத்தில் சமூக அக்கறையுடன் அணுகாமல் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்த சில கட்சிகள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையிலேயே, பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து இதை யாரும் அணுகவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கமல் இந்த விஷயத்தை சரியாக செய்து வருகிறார். யாரையுமே அவர் அரசியல்ரீதியாக குத்தி காட்டவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை என டிஜிபியிடம் மனு தந்தார்... சம்பந்தப்பட்டஇடத்தில் பாலியல் குற்ற செயல்களுக்கு எதிரான பேரணியை நடத்தினார்.

அரசியல் நாகரீகம்
பொள்ளாச்சி விஷயத்தில் இதுதான் சரியான அணுகுமுறை.. இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை, அதேசமயம் சமுதாய அக்கறையும் கலந்தே உள்ளது. ஆளும் கட்சியை கமல் இதற்கு முன்பு திட்டாத வார்த்தைகளா என்ன? ஆனால் இதை அவர் அரசியல் ஆக்க முயலவில்லை என்பதே அவரது அரசியல் நாகரீகம்! இதை பழமையும், பாரம்பரியமும் மிக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சக்கட்ட பாவம்!
ராஜீவ்காந்தி இறந்தபோது எல்லா பழியும் திமுக தலைமேல் வந்து விழுந்தது... இதனை வைத்தே அரசியல் செய்து அதிமுக ஆட்சியை பிடித்தது. அதுபோலவே இந்த முறையும் திசைதிருப்பி ஆட்சியை பிடிக்க எந்த அரசியல் கட்சியுமே யோசித்துவிடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்! நூற்றுக்கணக்கான பெண்களின் கற்பை சிதைத்து.. அதனை சாக்காக வைத்து பேசி பேசி... ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதுதான் எல்லாவற்றையும்விட மன்னிக்க முடியாத பாவம்! இதை சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சிகள் உணர்வார்களா?












Click it and Unblock the Notifications