என்னை நியமித்தது நீதிமன்றம்.. தமிழக அரசால் என்னை விடுவிக்க முடியாது.. பொன் மாணிக்கவேல் அதிரடி
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தமிழக அரசு விடுவிக்க முடியாது என்று பொன் மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-இல் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான சிலைகளை மீட்டெடுத்தார்.
இதனால் ஓய்வுக்கு பிறகும் அன்றைய தினமே இவரை ஓராண்டு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனால் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சிலை தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறுகையில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவிக்க முடியாது.
உயர்நீதிமன்றம்தான் என்னை நியமித்தது. எனவே உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் என்னிடம் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க இயலாது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.