பொங்கல் லீவு.. ஜனவரி 13, 17ம் தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவிக்குமா? வலுக்கும் கோரிக்கை
சென்னை: தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே ஜனவரி 13, 17 ஆகிய தேதிகளையும் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
2024 லீப் வருடம் என்பதால் இந்த முறை பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி வருகிறது. ஜனவரி 13ம் தேதி திங்கள்கிழமை போகி பண்டிகையாகும். போகி பண்டிகையை பொறுத்தவரை விடுமுறை என்றாலும் இப்போது வரை ஒவ்வொரு ஆண்டும் அரசு தனிப்பட்ட முறையில் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ விடுமுறை என்றால் பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 16-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் தான் அரசு விடுமுறை நாட்களாகும். ஆக மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிப்பது குறித்து இன்னும் தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியடவில்லை

வழக்கம் போல் அரசு இந்தாண்டும் விடுமுறை அறிவித்தால், சனி, ஞாயிறு, திங்கள் , செவ்வாய், புதன், வியாழன் என ஆறு நாட்கள் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும். அதேநேரம் வரும் ஜனவரி 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நாளாக அமைந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து வரும் 18 மற்றும் 19-ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் விடுமுறை நாட்களாகும். எனவே ஜனவரி 17ம் விடுமுறை அறிவித்தால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு பதில் அதற்கு அடுத்து வரும் சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அறிவிக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாக உள்ளன.
இந்த விடுமுறை தினத்துக்கு முந்தைய ஜனவரி 13 திங்கட்கிழமை மற்றும் விடுமுறைக்கு பிந்தைய ஜனவரி 17 வெள்ளிக்கிழமை வேலை நாட்களாக உள்ளன. ஆகவே, ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களையும் சேர்த்து தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆண்டு விடுமுறை பட்டியலில் ஜனவரி 11 முதல் 19 வரை விடுமுறையாக உள்ளது. அதனடிப்படையில் ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுக்காக வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் போது, மக்கள் முன்கூட்டியே தங்கள் பயணங்களை எளிய முறையில் திட்டமிட்டு தமிழர் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி சிரமமின்றி மீண்டும் ஊர் திரும்புவார்கள்.
தொடர் விடுமுறை கிடைப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். குறிப்பாக வெளியூர்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அது வசதியாக இருக்கும். ஆகவே, ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளையும் தமிழக அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications