பொன்முடி தான் முதல் நபர்.. சர்ச்சை பேச்சுக்காக திமுக மிகப்பெரிய ஆக்சன்.. ஸ்டாலின் சொல்லும் செய்தி
சென்னை: திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி என்பது மிகவும் முக்கியமானது.. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளருக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு மிகவும் முக்கியமான பதவியாகும். அந்த பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி உணர்ச்சி வசப்பட்டு முன்பு பேசிய பேச்சுக்களுக்காக கண்டனங்களுக்கு ஆளானாலும், கட்சி பதவி பறிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். கவர்னருடன் சண்டை எல்லாம் போட்டு அமைச்சர் பதவியேற்க வைத்த ஸ்டாலின், இன்று கட்சி பொறுப்பை பறித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பொன்முடி பேசியது என்ன
தமிழகத்தில் வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். பொன்முடி பேசுகையில், "ஒரு விலைமாது வீட்டிற்கு போகிறான்.. அங்கு போகும் போது ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார். இப்படி மேடையில் பேசிய பொன்முடி சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டியதுடன் மோசமாக பேசினார்.

இரண்டாவது முறை சர்ச்சை
இந்த பேச்சுக்கு, அதிமுக, பாஜகவைத் தாண்டி, திமுக ஆதரவாளர்களே பொன்முடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடி இதற்கு முன்னதாக ஓசி டிக்கெட் என்று பெண்களை விமர்சித்தும் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இரண்டாவது முறையாக சர்ச்சையில் சிக்கிய நிலையில், திமுக மூத்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.
கனிமொழி கண்டனம்
இதனிடையே பொன்முடியின் வீடியோ வைரலாக பரவிய நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
ஸ்டாலின் உத்தரவு
பொன்முடியின் இந்த பேச்சை கண்டித்த முதல்வர் ஸ்டாலின், அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது மிகவும்சக்தி வாய்ந்த பொறுப்பு, துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உள்ள பவர்புல் பதவியாகும். அந்த பதவியில் இருந்தே அமைச்சர் பொன்முடி தூக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பதவியை விடவும் கட்சியில் உள்ள துணை பொதுச்செயலாளர் பொறுப்பு திமுகவினர் முக்கியமாக பார்ப்பார்கள்..
முக்கியமான பதவி
ஏனெனில் அனைத்து முக்கிய ஆலோசனைகளிலும் உடன் இருக்க வேண்டிய பதவியாகும். திமுகவின் முக்கியமான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பதவியாகும். எனினும் இதுவரை உயர்பதவிகளில் உள்ளவர்கள் மீது சர்ச்சை பேச்சுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை.. சிறிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தான் நடவடிக்கையில் சிக்கி உள்ளார்கள் .
பொன்முடி நீக்கம்
பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வருத்தம் தெரிவித்ததும் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த முறை அப்படி இல்லை.. பொன்முடியின் பேச்சால் கோபம் அடைந்த ஸ்டாலின், அவரை கட்சியின் முக்கிய பொறுப்பான துணைச்செயலாளர் பொறுப்பில் இருந்தே அதிரடியாக தூக்கி உள்ளார். இது திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி சர்ச்சையில் சிக்கினால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்பதை ஸ்டாலின் இந்த பதவி பறிப்பின் மூலம் செய்திருப்பது தான் காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications