"அந்த" திட்டத்தின் பெயரை சொல்லும் போதே சற்று ஜெர்க் ஆன அமைச்சர் பொன்முடி.. ஏன் என்னாச்சு?
சென்னை: பெண்கள் இரு குழந்தைகளுடன் வளமாக வாழ வேண்டும் என வாழ்த்துவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நான் உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது என்னவென்றால், இங்கு வளைகாப்புக்கு வந்திருப்போர் சிலரில் இரண்டாவது குழந்தைக்காக வந்திருப்பீர்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் மருத்துவமனையிலேயே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள், ரொம்ப நல்லது. அப்போதுதான் குழந்தைகளை மிகச் சிறப்பாக வளர்க்க முடியும். இந்த காலத்தில் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆணோ பெண்ணோ ஏதோ இரு குழந்தைகள் போதும்.

ஆண் குழந்தைகள்
ஒரு சிலருக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கும், மூன்றாவதாக பெண் குழந்தை வேண்டும் என நினைப்பார்கள். அது போல் இரு பெண் குழந்தைகளை பெற்றோர், ஆண் குழந்தை வேண்டும் என நினைப்பார்கள். இப்படியே போனால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும். எனவே அளவோடு பெற்று திடமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு அப்போதிலிருந்தே இந்த உதவிகளை வழங்கி வருகிறது.

அனைத்து உதவிகள்
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனைகளிலேயே செய்து கொடுப்பார்கள். தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கான நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறார். கொரோனா காலத்தில் ரூ 4000 உதவித் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டத்தையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு மன கஷ்டம்
கர்ப்பிணிகளுக்கு மன கஷ்டம் இருக்கக் கூடாது. நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருந்து நல்லபடியாக குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் திமுகவின் சாதனைகளை விளக்கிச் சொல்லும் போது பெண்களுக்கான இலவச பயணத்தை ஓசி பயணம் என கூறிய அமைச்சர் பொன்முடி, இதனால் பெரும் பிரச்சினைகளை சந்தித்தார்.

கண்டனங்கள்
அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் விலையில்லா என்ற வார்த்தையையே பயன்படுத்தினார் என அதிமுக நிர்வாகிகள் திமுக அமைச்சர் பொன்முடியை விமர்சித்திருந்தனர். இது குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலினும், விடிந்ததும் நிர்வாகிகள் என்ன பிரச்சினையை கொண்டு வருவார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது என்றும் இதனால் தூக்கம் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனால்தான் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் திமுகவின் சாதனைகளை பட்டியலிடும் போது அமைச்சர் பொன் முடி சற்று ஜெர்க் ஆகி பின்னர் இலவச பயணம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications