ஸ்டாலின் கேபினட்.. இளைஞர் + சீனியர்.. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்விக்கு சரியான அமைச்சர்கள் சாய்ஸ்
சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியான ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு அமைச்சர் பட்டியலில் பல சுவாரசிய அம்சங்கள் உள்ளன.
உயர் கல்வித்துறை அமைச்சராக, பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரக் கூடியவை என்பதால் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அந்த கட்சி எம்எல்ஏக்களால், முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களும், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதை அடுத்து 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் இன்று மாலை ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டது.
ஸ்டாலின் அதிரடி முடிவு.. அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை.. என்ன காரணம்?
ஸ்டாலின் வழங்கிய பட்டியலுக்கு ஆளுநர் மாளிகை செய்து ஒப்புதல் அளித்து வெளியிட்டிருந்தது. இதில் கல்வித்துறை அமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பதவி வகித்தவர் தங்கம் தென்னரசு. கல்வித்துறையில் சிறப்பாக சீரமைப்பை ஏற்படுத்தினார் என்று அவருக்கு நல்ல பெயர் உண்டு. எனவே, அவர்தான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில் மகேஷ் திமுக இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருப்பவர். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை இவர் தோற்கடித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இதில் இளைஞரணி பங்கு முக்கியமாக இருந்ததால் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித்துறையை வழங்கியுள்ளார் ஸ்டாலின் . இளைஞர் என்பதால் புதிய புதிய யோசனை களுடன் பள்ளிக்கல்வித்துறையை இவர் மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை ஸ்டாலினுக்கு இருக்கிறது.
இதேபோன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் இந்த காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தங்கள் வசப்படுத்த கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதாக தொடர்ந்து திமுக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தது முதல் திமுக தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் சூரப்பா மீது 250 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சூரப்பா பதவி காலம் முடிவடைந்த நிலையில் விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் சூரப்பாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும். இந்த ஊழல் விவகாரத்தில் அவர் எந்த மாதிரி சாட்டையை வீச போகிறார் என்பது பற்றி கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது மட்டும் கிடையாது. புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கவும் முயற்சிகள் நடைபெற்றன. இதை எதிர்த்து பேராசிரியர் பேரவை போராட்டங்கள் நடத்தி வந்தது. இதற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திற்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியிருந்தனர் .இந்த பெயர் மாற்றத்தை தடுக்க வேண்டிய முக்கியமான பணி பொன்முடி வசம் வந்து சேரப்போகிறது.
உயர்கல்வித்துறை பல்வேறு வகைகளிலும் சீரழிக்கப்படுகிறது என்று திமுக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அனுபவம் வாய்ந்த சீனியர் பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமித்து உள்ளது ஸ்டாலினின் வியூகம் என்று பார்க்கப்படுகிறது. இதுவரை இருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் சரி செய்து பொன்முடி அவற்றை நிவர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் கல்வியாளர்கள்.