பொன்முடியிடம் இருந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவி பறிப்பு! ஸ்டாலினே தலையிட்டு அதிரடி!
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்படுவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொறுப்பு திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்துக்கான காரணத்தை அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி , விலைமாதர்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
அமைச்சர் பேச்சு
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பொன்முடி பெண்களையும் சைவம், வைணவம் மதங்களை விலைமாது கதைகளுடன் ஒப்பிட்டும் இழிவுப்படுத்தியும் அவர் பேசியிருந்தார்.
பொன்முடி
இதையடுத்து பொன்முடி , அமைச்சர் பதவிக்கு கூட தகுதி இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். திமுக எம்பியும், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கனிமொழி பேச்சு
அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கனிமொழி கண்டித்திருந்தார்.
திமுக பொதுக் கூட்டம்
திமுக பொதுக் கூட்ட மேடைகளில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. ஏற்கெனவே பெண்கள் இலவச பேருந்து சேவை தொடர்பாக பொன்முடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சொத்து குவிப்பு வழக்கு
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சரானார்.
அமைச்சரவை மாற்றம்
இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு வனத்துறை ஒதுக்கப்பட்டது. அப்போது கூட அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக் கட்டியதால்தான் அவரது பொறுப்பு மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
பட்டியலினம்
அது போல் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் ஜாதி குறித்து அவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா என்றும் அவர் பெண்கள் மத்தியில் கேட்டிருந்தார்.
பொன்முடி நீக்கம்
இந்த நிலையில் பொன்முடியிலிருந்த பொறுப்பு நீக்கத்தை திமுக பொதுச் செயலாளராக இருந்து வரும் துரைமுருகன் கூட நீக்கியிருக்கலாம். ஆனால் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு இந்த அதிரடியை எடுத்துள்ளார்.

கோபத்தில் ஸ்டாலின்
அந்த அளவுக்கு பொன்முடியின் பேச்சு முதல்வர் ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட போது பொழுது விடிந்ததும் நம் மூத்த நிர்வாகிகள் என்ன பிரச்சினையை இழுத்து விடுவார்களோ என்பதை நினைத்தால் எனக்கு தூக்கம் கெட்டு போகிறது என எச்சரித்திருந்தார். அப்போது அதே மேடையில் பொன்முடியும் இருந்தார். இது போல் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொன்முடி தனது சர்ச்சை பேச்சை நிறுத்தவில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியதை பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
திருச்சி சிவாவுக்கு பதவி
பொன்முடியின் பதவி திருச்சி சிவாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவாவுக்கு பெரிய பதவி ஏதும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த முக்கிய பதவி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications