ஷூட்டிங்ல பான்பராக்கை துப்பிய பொன்னம்பலம்! யார் அந்த காட்டானு கேட்ட விஜயகாந்த்.. நெகிழ்ச்சி பின்னணி
சென்னை: தனது வாழ்வில் விஜயகாந்த் எப்படி ஒளியேற்றி வைத்தார் என்பது குறித்து நடிகர் பொன்னம்பலம் உருக்கமாக கூறிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பொன்னம்பலம் கூறிய கருத்துகளை ப்ளூசட்டை மாறன் வெளியிட்டிருந்தார். அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக் போட்டு துப்பிக்கொண்டு இருந்தேன். அதை பார்த்து தனது உதவியாளரிடம்..

'யார் இந்த காட்டான்? ஆள் வர்றதை கூட பாக்காம கண்ட எடத்துல துப்பிக்கிட்டு இருக்கான்?' எனக்கேட்டார். 'அந்த ஹிந்தி வில்லனுக்கு டூப் போட வந்த ஆளுதான் இவரு' என்றார். 'அப்படியா? இவரையே நடிக்க சொல்லு. ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம்' எனக்கூறி.. என் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கினார்.
சில மாதங்கள் கழித்து என் தங்கைக்கு கல்யாணம் வைத்திருந்தேன். 19 ஆம் தேதி கல்யாணம். 16 ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். 'கல்யாண செலவுக்கு உதவி வேணுமா?' என்றார். பாதிக்கும் மேல் சமாளித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது' என்றேன்.
எங்கள் இருவருக்குமான முக்கியமான சண்டைக்காட்சி சில வாரங்கள் கழித்து எடுக்க வேண்டியது. ஆனால் இயக்குனரிடம் பேசி 18 ஆம் தேதி இரவு அந்த ஷூட்டிங்கை வைக்க சொன்னார். பகல் முழுக்க வேறு படத்தில் நடித்துவிட்டு... இரவில் என்னுடன் சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு, உடனே மண்டபத்திற்கு வந்து என்னை பார்த்தார்.
'இந்தா.. இதுல 50,000 ரூபா இருக்கு. உன்னோட சம்பளப்பணம்' எனக்கூறிய கேப்டனை என்றும் மறக்க மாட்டேன். இவ்வாறு பொன்னம்பலம், வில்லன் நடிகர் கூறியதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார்.
பின்னணி என்ன? நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே தேமுதிக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தனர்.
இதையடுத்து அவரது இறப்பை அறிந்ததும் பலர் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீடு, கட்சி அலுவலகத்தில் சாரை சாரையாக குழுமினர். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பொதுமக்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்திற்கு பல்வேறு ரசிகர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் அடுத்த நாளான 29 ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனால் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பேருந்துகள், லாரிகள், டெம்போக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருடன் தொண்டர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications