"உங்களுக்கு தர எங்ககிட்ட எதுவுமே இல்லை.. இந்த பாசி மாலையை வாங்கிக்கிறீங்களா சார்" நெகிழ்ந்த கமிஷனர்
சென்னை கமிஷனருக்கு ஏழை தம்பதி பாசி மாலையை வழங்கினர்
Recommended Video
சென்னை: "உங்களுக்கு தர எங்க கிட்ட எதுவுமே இல்லை.. இந்த பாசி மாலையை வாங்கிக்கிறீங்களா சார்" என்று கடத்தப்பட்ட குழந்தையை பெற்று கொண்ட பெற்றோர், சென்னை கமிஷனர் விஸ்வநாதனுக்கு அன்புடன் பரிசு வழங்கினர்.
வடமாநில தம்பதிகள் ஜான்போஸ்லே - ரந்தீஷா ஆகியோர் மெரினாவில் பலூன் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். சென்னை மெரினாவின் கடற்கரை காந்தி சிலை அருகே பின்பக்கம் குடிசை போட்டு தங்கி வருகிறார்கள்.
இவர்களது 7 மாத குழந்தை ஜானை, 24 வயது இளம்பெண் ரேவதி என்பவர் கடத்த முடிவு செய்தார். குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்ததும், ஜானின் பெற்றோரிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டினார்.

குழந்தை
தினமும் 100, 200 ரூபாய்க்கு அல்லல்படும் நிலையில், ஒருநாளைக்கு 2 ஆயிரம் தருவதாக சொல்லவும் பெற்றோரும் மண்டையை ஆட்டினர். குழந்தையை டாக்டரிடம் காட்டிவிட்டு போகலாம் வாங்க என்று சொல்லி பெற்றோரை அழைத்துகொண்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு போனவர், அப்படியே மாயமாகிவிட்டார்.. ஆஸ்பத்திரிலேயே குழந்தையை அசால்ட்டாக கடத்தி சென்று விட்டார் அந்த பெண். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனிப்படை
அதனால், குழந்தையை மீட்க 8 தனிப்படைகளை அமைத்து கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, போலீசாரும் 25 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கடத்தல் பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் நர்ஸ் ஜூலியட் உதவியுடன் குழந்தையை கடத்திய பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த குழந்தையை அதன் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை கமிஷனர் ஆபீசில் நடைபெற்றது.

முத்த மழை
இதற்காக பெற்றோர், குழந்தையை மீட்க உதவியாக நர்ஸ் ஆகியோர் அங்கு வந்திருந்தனர். கமிஷனர் ஏகே விஸ்வநாதன், குழந்தையை தாயாரிடம் வழங்கினார். அப்போது, அந்த பெண் ஆனந்த கண்ணீர் வடித்தார்.. குழந்தையை வாரியணைத்து மாறி மாறி முத்தம் தந்தார். இதை பார்த்ததும், கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் கண்களும் கலங்கிவிட்டன.

பாசி மாலை
அந்த ஏழை தம்பதியினர், "எங்க குழந்தையை மீட்டுக்கொடுத்த உங்களுக்கு நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்.. உங்களுக்கு பெரிய பரிசு தரணும்னு ஆசைதான்.. ஆனா, எங்ககிட்ட பெரிசா தர எதுவுமே இல்லை.. வசதியும் இல்லை.. இந்த பாசி மாலையை வாங்கிப்பீங்களா சார்" என்று சொல்லி போலீஸ் கமிஷனருக்கு அந்த பாசி மணியை பரிசாக தந்தனர்.. கமிஷனரும் அதை அன்பாக பெற்று கொண்டார். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசார், அதற்கு உதவியாக இருந்த நர்ஸ் ஜூலியட் உட்பட அனைவருக்கும் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications