பூவை ஜெகன் மூர்த்திக்கு "தில்லு".. முதல் நபர் இவரே.. காஞ்சிபுரம் டூ திருவள்ளூர்.. தெம்பில் எடப்பாடி
சென்னை: அதிமுக கூட்டணியில் யார் யார் இணைய போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், புரட்சி பாரத கட்சி படு மும்முரமாகி உள்ளது.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று நினைப்பவர்களுள் பூவை ஜெகன் மூர்த்தியும் ஒன்று.. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் அப்போதுதான் வரப்போகும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் செய்தியாளர் பேட்டியிலேயே பலமுறை தெரிவித்தவர் மூர்த்தி.

ஆதங்கம்: அதிமுகவிலிருந்து சிலர் விலகியிருப்பதால்தான், தமிழக சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியிருந்த பூவை ஜெகன், சசிகலா இல்லாததால் தான் அதிமுக ஆட்சியை நழுவவிட்டதாகவும் ஒருமுறை காரணத்தை கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, ஒருமுறை பாஜக குறித்தும் பூவை மூர்த்தி கருத்து கூறியிருந்தார்..
அதில், "தமிழக அரசியலை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களைவிட தனித்துவமானது, இங்கு திராவிடக் கட்சிகளை மீறி தேசியக் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது.. பாஜக தலைமையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு.. திராவிடக் கட்சிகளுடன் வேண்டுமானால் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.. ஆனால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை குறைத்து எடை போட முடியாது, காரணம் அந்த கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது" என கூறி பலரையும் கவனிக்க வைத்தவர்.
இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் நெருங்கி வருகிறது.. அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது... அதிமுக தலைமையிலான கூட்டணியுடன் எம்பி தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக பூவை ஜெகன் மூர்த்தி கடந்த செப்டம்பர் மாதமே வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
மூர்த்தி: ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற தலைவர்கள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்காத நிலையில், முதல் நபராக, எடப்பாடிக்கு ஆதரவை அளித்திருந்தார் மூர்த்தி..
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து வரும் வாரத்தில் பேசி உறுதி செய்யப்படும் என்று புரட்சி பாரதம் கட்சி தரப்பில் தற்போது, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விழுப்புரம் , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை புரட்சி பாரதம் கேட்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டை இலை: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கேவி குப்பம் என்று சொல்லப்படும் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் பூவை மூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.. ஆனால், அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.. இந்த முறையும் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறங்குவார் என்று தெரிகிறது.. இருந்தாலும், அவர் கேட்டிருக்கும் 3 தொகுதிகளில் எந்த தொகுதியை அதிமுக ஒதுக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications