மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் "மதம்" பிடித்துவிடும் - அண்ணாமலைக்கு சுந்தர்ராஜன் அட்வைஸ்
சென்னை: எப்போதும் மதம், மதம் என்று பேசிக்கொண்டிருந்தால் ஒருநாள் 'மதம்' பிடித்துவிடும் என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு பூவுலகின் நண்பர் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு வெடித்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை பரிமாறி மக்கள் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு இருப்பதால் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் “ப்ளான்”.. அப்பாவு பங்கேற்கும் “இந்து மதம் அறிவோம்” மாநாடு! அனுமதிகோரி ஹைகோர்ட்டில் மனு
பட்டாசு வெடிக்க தடை
தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியிருக்கும் நிலையில் பட்டாசு கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகைக்கு மக்கள் தயாராகி வந்தாலும் ஒருபக்கம் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டாசுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன டெல்லியில் ஒட்டுமொத்தமாகவே பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அண்ணாமலை ட்விட்
தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேரக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பட்டாசுகளை நிறைய வெடியுங்கள் என்று பேசினார்.
பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள்
இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், ''அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.. தமிழக மக்கள் இன்பம் பெருகட்டும். அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும் தீபாவளியாக இருக்கட்டும். நிறைய பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள். சிவகாசியில் இதை நம்பி இருக்கும் 8 லட்சம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த முறை நிறைய பட்டாசுகளை வெடிப்போம். பட்டாசு வெடிப்பது என்பது நமது கலாசாரம். காற்று மாசுபாடு எல்லாம் ஒரு நாளில் பெரிதாக பார்க்க வேண்டாம்.
சிவகாசி வாழ வேண்டும்
ஒரு நாளில் எதுவும் ஆக போவது இல்லை. எத்தனை பேர் வாகனங்களில் போகிறார்கள். படித்தவர்கள் எல்லாம் வீட்டில் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க மறுக்கிறீர்கள். காற்று மாசு வந்துவிட்டதாக கூறுகிறீர்கள். அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஒருநாள் காற்று மாசுபட்டால் ஒன்னும் ஆகாது. சிவகாசி வாழ வேண்டும். தமிழகம் வாழ வேண்டும். இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் நமது ஊரில் இருந்துதான் செல்கிறது'' என்றார்.
சுந்தர்ராஜன் ட்விட்
இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுந்தர்ராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- "நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது" - என்கிறார் அண்ணாமலை. இவர் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, கொடுமை.
மருத்துவமனைக்கு போய் பார்த்தால் தெரியும்
தீபாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால் தெரியும் பட்டாசு மாசால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று. மிஸ்டர், உலகம் முழுவதும் காற்று மாசால் 1கோடி பேர் இறக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வுகாலம் 7.5 ஆண்டுகள் காற்றுமாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“மதம்” பிடித்துவிடும்
காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் "மதம்" பிடித்துவிடும். இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான் பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.