பென்ஷன்தாரர்களே.. நேரடியாக உங்க வீட்டுக்கே வர்றாங்களாம்.. ஸ்பாட்டிலேயே "வாழ்நாள் சான்றிதழ்".. சூப்பர்
சென்னை: மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. உயிர்வாழ் சான்றிதழ் குறித்த, அறிவிப்பையும், அரசு வெளியிட்டிருக்கிறது.
தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வருடத்துக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

உயிர்வாழ் சான்றிதழ்: இந்த உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அருகிலுள்ள இ-சேவை மையம், வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் புதுப்பிக்கலாம்...
ஒருவேளை, ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையானால், உயிர்வாழ் சான்றிதழை மேலும் புதுப்பிக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும்... ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் மரணம் அடைந்தால் அத்தகைய ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர் இறப்பு சான்றிதழின் நகலை இந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் விதிமுறையாக உள்ளது.
வாழ்நாள் சான்றிதழ்: மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை தபால்காரர்கள் மூலம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று, அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜீவன் பிரமான் திட்டம்: இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
அஞ்சல் ஊழியர்கள்: சென்னை நகர மண்டலத்தில் 2,191 நகர்ப்புற மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூலம் 2,500க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள், ஆதார் மொபைல் எண்ணை புதுப்பித்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் சார்ந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
சென்னை நகர மண்டலம், கடந்த 2022-23ஆம் நிதியாண்டில், சுமார் 1,16,137 மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, தபால்காரர்கள் மூலம் அவர்களின் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வழிவகை செய்துள்ளது.
சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்கள் மூலம் அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications