போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் காலமானார்! ஜவுளி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெசவாளி!
சென்னை: தமிழ்நாட்டின் பிரபல ஜவுளிக்கடைகளில் ஒன்றாக திகழும் போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ்நாட்டில் 4 தலைமுறைகளாக ஜவுளிட் தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனம் போத்தீஸ். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் அருகே உள்ள கூனங்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் போத்தி மூப்பனார். ஆரம்பத்தில் சைக்கிளில் சென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜவுளி விற்பனை செய்து வந்த போத்தி மூப்பனார் 1949ஆம் ஆண்டு ஸ்ரீ வில்லிப்புதூர் பேருந்து நிலையம் அருகே போத்தி மூப்பனார் சன் அன் கோ என்ற பெயரில் ஜவுளிக்கடையை தொடங்கினார்.

போத்தி மூப்பனாரின் காலத்திற்கு பிறகு அவரது ஒரே மகனான சடையாண்டி மூப்பனார் தந்தையின் ஜவுளித் தொழிலை கவனிக்க ஆரம்பித்தார். திருநெல்வேலியில் போத்தீஸ் என்ற ஜவுளிக்கடையை தொடங்கிய அவர் 2000 காலக் கட்டத்தின் தொடக்கத்தில் சென்னையில் போத்தீஸ் ஜவுளிக்கடையின் கிளையை தொடங்கினார். 2வது தலைமுறையாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட சடையாண்டி மூப்பனார், 3வது தலைமுறை வாரிசுகளான தனது பிள்ளைகள் ரமேஷ், போத்திராஜ், முருகேசன், கந்தசாமி ,உள்ளிட்டோருக்கு ஜவுளித் தொழிலின் நெளிவு சுளிவு உள்ளிட்ட சூட்சுமங்களை கற்றுக்கொடுத்தார்.
தாத்தாவும், தந்தையும் போத்தீஸ் நிறுவனத்தை வளர்க்க பாடுபட்டதை போல் 3ஆம் தலைமுறை வாரிசுகளும் மிகக் கடுமையாக உழைத்து போத்தீஸை வேற லெவலில் வளர்ச்சி பெற வைத்தனர். இன்று தமிழ்நாட்டில் போத்தீஸ் துணிக்கடை என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ள போத்தீஸ் நிறுவனம். நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, என தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கிளைகள் உள்ளன.
தற்போது 4ஆவது தலைமுறையாக சடையாண்டி மூப்பனாரின் பேரன், பேத்திகள் போத்தீஸ் குழுமத்தை கவனித்து வருகின்றனர். வெறும் ஜவுளிக்கடையோடு நிற்காமல் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் என்ற பெயரில் நகைக்கடைகளும் முக்கிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன. இப்படி ஜவுளி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ள சடையாண்டி மூப்பனார் சாதாரண நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்.
சென்னையில் மகன்கள் வீட்டில் வசித்து வந்த இவர், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் அருகே உள்ள பூர்விக கிராமத்தில் சடையாண்டி மூப்பனாரின் இறுதி காரியம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications