துரைமுருகன் நிகழ்ச்சியில் திடீர் பவர் கட்.. மின் உதவி பொறியாளர்கள் இருவர் பணியிடமாற்றம்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் இரு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் தான் படித்த பள்ளி குறித்தும் பள்ளி காலத்தில் இருந்த அனுபவம் குறித்தும் மேடையில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் மேலும் பேசத் தொடங்கிய போது திடீரென அவரது மைக் வேலை செய்யவில்லை. அப்போது துரைமுருகன் ஏன் என்னாச்சு என கேட்டார். மேடையில் இருந்தவர்கள் கரண்ட் கட் சார் என கூறினர். இதையடுத்து பேச்சை நிறுத்திய துரைமுருகன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.
துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோதே.. திடீரென மைக் ஆப்.. கரண்ட் கட்.. என்னாச்சு?
தமிழகத்தில் மின் தடை
தமிழகத்தில் மின் துண்டிப்பே இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் விழாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இரு அதிகாரிகள் டிரான்ஸ்பர்
காட்பாடி, தாராபடவேடு துணை மின் நிலைய உதவிப் பொறியாளர்கள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலக்கரி தட்டுபாட்டால் மின் தடை ஏற்படுவதாக பிற கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் செந்தில் பாலாஜியோ போதுமான அளவுக்கு நிலக்கரி இருப்பு இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.
10 ஆண்டுகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது மின் தடை ஏற்பட்டு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த பிரச்சினை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவ்வப்போது மின்சார தடை ஏற்படுகிறது.
மின் தடை
இரவு பகல் பாராமல் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின்சாரத்தை நம்பி இருக்கும் தொழில்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. நகரங்கள், மாநகரங்களில் மின் தடையின் தாக்கம் அந்தளவுக்கு இல்லை. ஆனால் கிராமப்புறங்களில் மணிக்கணக்கில் மின் தடை ஏற்படுகிறது.