சென்னையில் தூங்க முடியவில்லை.. அதிகரித்த மின்வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்.. வெளியான குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நாளில் இருந்து சென்னை அயனாவரம், மாதவரம், மணலி, ஆவடி, கிண்டி, ராயப்பேட்டை உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சில இடங்களில் ஒரு நாளைக்கு 10 முறை மின்வெட்டு ஏற்படும் நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் அந்த மின்வெட்டுக்கான காரணம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையே தான் சென்னையில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டசபை தேர்தல் நாளான 23ம் தேதி முதல் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டுகள் ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் அடிக்கடி மின்வெட்டு
கடந்த 23ம் தேதி முதல் சென்னையில் ஆவடி, கிண்டி, சூளைமேடு, ராயப்பேட்டை, ராமாபுரம், அயனாவரம், மாதவரம், மணலி உள்பட பல இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வவருகிறது. இதுதவிர பிற இடங்களிலும் மின்சாரம் தடைப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அயனாவரத்தில் உள்ள விவேகானந்தா மேட்டுத்தெருவில் தேர்தல் நாளான 23ம் தேதி மட்டும் 10 முறை மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதுதவிர காலை முதல் இரவு வரை பல இடங்களில் மின்வெட்டு பதிவாகி உள்ளது.
மின்வெட்டால் மக்கள் அவதி
தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வீடுகளில், ஏசி, ஃபேன் இன்றி இல்லாத நிலை உருவாகி உள்ளது. இப்படியான சூழலில் மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மின்வெட்டுக்கு என்ன காரணம்?
இதுபற்றி மின்சார துறை அதிகாரிகள் கூறுகையில், ''சென்னையில் பல இடங்களில் பராமரிப்பு பணி செய்யப்படாமல் உள்ளது. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளின்போது மின்வெட்டு இருக்க கூடாது என்பதால் பராமரிப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளாலும் பராமரிப்பு பணி தள்ளிப்போனது.
இதனால் துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள், பில்லர் பாக்ஸ்களில் நடக்கும் வழக்கமான பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதனால் டிரான்ஸ்பார்மரில் பழுது, பில்லர் பாக்ஸில் தீவிபத்து, மின் வழித்தடங்களில் பழுது உள்ளிட்டவை அதிகரித்துள்ளது. இதனால் தான் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இருப்பினும் இந்த பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பராமரிப்பு பணி எப்போது?
பழுது நீக்க முடியாத இடங்களில் மாற்று மின்வழித்தடங்கள் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ்கள் பழுதாவது தவிர்க்க முடியாதது. புகார்களைக் கண்காணிக்க பிரத்யேகக் குழுக்கள் உள்ளன.
தற்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஏரியா வாரியாக பட்டியல் கோரியுள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீங்கி உள்ளதால் இனி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்'' என்று கூறியுள்ளனர்.













Click it and Unblock the Notifications