பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் கடன் வரம்பு உயர்வு? முத்ரா லோனில் மத்திய அரசு குட் நியூஸ்?
சென்னை: வங்கி கடன்களில் அதிக வட்டி, அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம், சிக்கலான நடைமுறைகள் போன்றவை நெருக்கடியை தந்துவிடுகின்றன.. இதனால் சிறு தொழில் முனைவோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.. இவர்களுக்காகவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்ற திட்டமாகும்.. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஏராளமாகும்.. அதனால்தான் வரப்போகும் பட்ஜெட்டில் இத்திட்டத்தின் கடன்தொகை உயர்த்தி அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
இன்றைய விலைவாசி போகிற போக்கை பார்த்தால் செலவுகள் கட்டுக்குள் வருவதில்லை. இதனால் நடுத்தர ஏழை மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.. இதனால் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.. அந்தவகையில் சிறு தொழில் முனைவோர்களும் கடனையே பிரதானமாக நம்பி உள்ளனர்..

இதற்காகவே கொண்டு வரப்பட்டதுதான் முத்ரா யோஜனா திட்டம்.. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, பெரு நிறுவனங்கள் அல்லாத, விவசாயம் சாராத சிறு மற்றும் குறு தொழில்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பற்ற கடன் வசதிகளை வழங்குவதுதான்..
இதன் கீழ் தகுதியான பயனாளிகள் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். ஆரம்பத்தில் ரூ.10 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2024-25 பட்ஜெட்டில் இந்த வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டது.. இந்த கடன்தொகை வரப்போகும் பட்ஜெட்டில் உயருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
கடன்கள் 4 பிரிவுகள்:
சிசு (Shishu) - ரூ.50,000 வரை (தொடக்க நிலை வணிகங்களுக்கு)
கிஷோர் (Kishore) - ரூ.50,001 முதல் ரூ.5 லட்சம் வரை
தருண் (Tarun) - ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை
தருண் பிளஸ் (Tarun Plus) - ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை
இந்த திட்டத்தின் பலனை பெற தகுதிகள்
18 முதல் 65 வயதுக்குள் உள்ள இந்திய குடிமக்கள், விவசாயம் அல்லாத வருமானம் ஈட்டும் வணிகம் அல்லது சுயதொழில் செய்யும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.. ஆனால், கடன் தவறியவராக இருக்கக்கூடாது.
வட்டி விகிதம் வங்கி மற்றும் கடன் வகையைப் பொறுத்து மாறுபடும்... பொதுவாக ஆண்டுக்கு 7% முதல் ஆரம்பிக்கிறது. திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கும். சில வங்கிகள் முத்ரா கார்டு வழங்குகின்றன... இதில் பயன்படுத்திய தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும்.
பொதுவாக வங்கிகளில் கடன் வாங்கும்போது processing fee அதாவது செயலாக்க கட்டணம் என்ற பெயரில் ஒரு தொகை வசூலிக்கப்படும். ஆனால் முத்ரா கடன்களில் பல வங்கிகள் செயலாக்கக் கட்டணம் வசூலிப்பதில்லை அல்லது மிகவும் குறைவாக மட்டுமே வசூலிக்கின்றன. இதனால் ஆரம்ப செலவு குறைகிறது. பெண்கள், SC/ST, சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோருக்கு சிறப்பு முன்னுரிமையும் இந்த திட்டத்தில் உண்டு..
தேவையான ஆவணங்கள்:
அந்த திட்டத்தில் இணைய விரும்புவோர், ஆதார், பான், முகவரி சான்று, வங்கி கணக்கு விவரம், வணிக பதிவு அல்லது உரிமம், கடந்த 6 மாத வங்கி அறிக்கை போன்றவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. அரசு/தனியார் வங்கி அல்லது NBFC கிளையை அணுகலாம். அல்லது www.mudra.org.in மற்றும் உத்யம்மித்ரா போர்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் முத்ரா யோஜனாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான mudra.org.in-க்கு செல்ல வேண்டும்.. முகப்பில், சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய 3 வகையான கடன் ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்..
பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துகொள்ள வேண்டும்.. அந்த விண்ணப்ப படிவத்தை சரியாக பிழையின்றி நிரப்பி கொள்ள வேண்டும்.. ஆதார் அட்டை, பான் கார்டு, முகவரி, வணிக முகவரி சான்று, வருமான வரி கணக்கு, சுயவரி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
இந்தப் படிவத்தை அருகிலுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை வங்கி சரிபார்த்து, தகுதியுள்ளதாகக் கண்டறியப்பட்டால், ஒரு மாதத்திற்குள் கடன் வழங்கப்படும்.
பட்ஜெட்டில் கடன் வரம்பு உயருமா
வரப்போகும் பட்ஜெட்டில் முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வரம்பு அதிகப்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. சிறு வணிகர்கள், கைவினைஞர்கள், கடைக்காரர்கள், பழம்-காய்கறி வியாபாரிகள் என அத்தனை பேருக்கும் இந்த முத்ரா யோஜனா திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்..
ஒருவேளை கடன் தொகை மீண்டும் உயர்த்தப்பட்டதால், தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர் இன்னும் அதிக முதலீடு செய்ய முடியும். புதிய இயந்திரங்கள் வாங்குதல், கூடுதல் ஊழியர்கள் நியமித்தல், உற்பத்தி திறனை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எளிதாகும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும், உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும் என்றெல்லாம் நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications