தேமுதிக பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா.. கையை பிடித்து தொண்டர்களிடம் அறிவித்த விஜயகாந்த்
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டு ஏகமனதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலில் விழுந்து ஆசி பெற்ற பிரேமலதாவின் கையை பிடித்து தொண்டர்களிடம் அறிவித்தார் விஜயகாந்த்.
உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பினார். அவர் பூரண குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, வீடு திரும்பிய அடுத்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

அதன்படி, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தொடங்கி பகுதி கழக செயலாளர்கள் வரை அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது, அவசர அவசரமாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படுவது ஏன் என கேள்வி எழுந்தது.
கட்சியில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு செயல் தலைவர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவி கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவிக்கப்பட்ட உடன் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரேமலதா. இதனையடுத்து பிரேமலதாவின் கையை பிடித்து உயர்த்தி தொண்டர்களிடம் காண்பித்தார் விஜயகாந்த். அப்போது தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று உற்சாக குரல் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications