மக்கள் கடலில் மிதந்தபடி விஜயகாந்த் ஊர்வலம்.. "வண்டிக்கு வழி விடுங்க”.. ஸ்பீக்கரில் பேசிய பிரேமலதா!
சென்னை: மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி விஜயகாந்த்தின் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு இறுதிச் சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சாலை முழுக்க மக்கள் சூழ்ந்துள்ளதால், வாகனம் செல்ல வழி விடுமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்தார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவரது மறைவையடுத்து சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நள்ளிரவு வரை அங்கே ஏராளமான பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது உடல் சென்னை தீவுத்திடலுக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டு, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. 2.30 மணியளவில் தொடங்கிய இறுதி ஊர்வலம் இப்போது தான் பச்சையப்பன் கல்லூரியைக் கடந்துள்ளது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க திரண்டு, விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், வாகனம் செல்ல ஒத்துழைப்பு தருமாறு விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் உள்ள பிரேமலதா ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாகனம் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் சாலைகளில் தழும்பி இருப்பதால் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்கிறது. எனவே, வாகனம் செல்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னும் ஓரிரு மணி நேரத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்த் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இறுதிச் சடங்கு நிகழ்வை காண்பதற்காக எல்இடி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications