நம்பியவர்கள் செய்த துரோகம்.. விஜயகாந்த் உடல் நல பாதிப்புக்கு காரணம் சொன்ன பிரேமலதா
சென்னை: நம்பியவர்கள் செய்த நம்பிக்கை துரோகமே விஜயகாந்த் உடல் நல பாதிப்பிற்கு காரணம் என்று அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா. அப்போது அவர் அரசியலில் பெண்கள் இருப்பது சவாலான விசயம் என்று கூறினார். ஜெயலலிதா அந்த சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர் என்றும் கூறினார்.

கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக மக்களுடனும் ஆண்டவனுடனும்தான் கூட்டணி என்று கூறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 2011ஆம் ஆண்டு வரைக்கும் தமிழக அரசியலில் தனித்தே கோலோச்சியது தேமுதிக என்று கூறினார்.
விஜயகாந்த் கடந்த 2016ஆம் ஆண்டு வரைக்கும் உடல் நலத்துடன்தான் இருந்தார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 2017ஆம் ஆண்டு முதலே அவரது உடல் நலம் படிப்படியாக பாதிக்கப்பட்டது. பேச்சு குறைந்து போனது செயல்பாடுகள் படிப்படியாக முடங்கி விட்டது. 70 வயதாகும் விஜயகாந்த் தற்போது சர்க்கர நாற்காலியில் வரும் அளவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.
விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் நம்பிக்கை துரோகம் என்று கூறியுள்ளார் பிரேமலதா. தன்னை சுற்றியிருந்தவர்களை அதிகம் நம்புவார் விஜயகாந்த். நம்பியவர்கள் செய்த துரோகம்தான் உடல் நலம் பாதிக்க காரணம் என்று இன்றைய தினம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக போனார் விஜயகாந்த். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார் விஜயகாந்த்" என்று குற்றம் சாட்டினார். அதற்கு காட்டமாக பதில் அளித்த விஜயகாந்த், "ஜெயலலிதாதான் எனக்கு மது ஊற்றிக் கொடுத்தாரா?" என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த சண்டைகள் மறந்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறினார். விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவர் ஆனார். அ.தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே இருந்த மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எல்லாம் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்ததில்லை.
ஆனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால், எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்குக் கிடைத்தது. அதன்பிறகு சில மாதங்களில் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார். நாக்கை துறுத்தி அவர் சட்டசபையில் சண்டையிட்டதை தமிழகமே பார்த்தது. திராணியிருந்தால் தனித்து போட்டியிடுவார்களா என்று சவால் விட்டார் விஜயகாந்த். அந்த சவாலை ஏற்று லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார் ஜெயலலிதா.
விஜயகாந்த் உடல் நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் முகமாக அறியப்பட்டவர் விஜயகாந்த். தற்போது கட்சியின் நிறுவனர் தலைவராக மட்டுமே இருக்கிறார். அவர் உடல் நலத்துடன் இருக்கவேண்டும் என்பதே பல கோடி தேமுதிக தொண்டர்களின் வேண்டுதலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications