பட் அந்த டீலிங் எனக்கு பிடிக்கல.. கேரளாவில் ‘பெரிய’ கட்சியுடன் பேசிய பிரேமலதா? ஆனாலும் சிக்கல்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்ற கேள்வி தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா எடுத்துவரும் நடவடிக்கைகள், கட்சியின் அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்த பிரேமலதா அருகிலுள்ள கேரளாவுக்குச் சென்ற அங்கு தமிழகத்தின் அரசியல் கட்சியொன்றின் குடும்பத்தினரிடம் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி ஆரம்பித்த புதிதில் சில தோல்விகளை சந்தித்தாலும், 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி உயரத் தொடங்கியது. அதிமுக உடன் 2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை சென்றார்.
அதற்கு பிறகு அதிமுக தேமுதிக இடையே மோதல் வெடித்தது. இதை அடுத்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதற்கு பிறகு இந்த கூட்டணி உடைந்தது. விஜயகாந்த் மரணம் அடைந்தாலும் பாஜக தேமுதிக இடையே ஒரு சுமூகமான உறவு இருந்தது.

தமிழக அரசியல்
நேரடி கூட்டணி இல்லாவிட்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையே ஓர் மறைமுக தொடர்பு இருந்து வந்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் வலுப்பெற்றது. இந்த பின்னணியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிரேமலதா விஜயகாந்த்
ஆனால், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதாவை அவர் சந்திக்கவில்லை. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இதுகுறித்து பிரேமலதா விளக்கம் அளிக்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு யாரும் எங்களை அழைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார். இந்த கருத்து, தேமுதிக - என்டிஏ உறவில் ஒரு அதிருப்தி நிலவுகிறது என்ற எண்ணத்தை மேலும் உறுதி செய்தது. இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என்ற தகவலும் பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டது.
2026 தேர்தல்
இதன் காரணமாகவே, தற்போதைக்கு தேமுதிகவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம், தேமுதிக தரப்பில் என்டிஏ கூட்டணிக்காக 10 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் அதிகமாக இருப்பதாக கருதி, உடனடி முடிவு எடுக்காமல் பாஜக தலைமை தயக்கம் காட்டியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்டிஏ யூகங்கள்
மற்றொரு பக்கம், தேமுதிக முதலில் அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியது. பாஜக தலைமையும் இதில் ஆர்வம் காட்டியது. ஆனால், இதனால் அதிமுக தலைமை அதிருப்தி அடைந்து, தேமுதிகவை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேமுதிக திமுக கூட்டணியை நோக்கி நகர்ந்தது. திமுக தரப்பில் ஆறு தொகுதிகள் வரை வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தேமுதிக தரப்பில் எட்டு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் தேர்தல் செலவுக்கான நிதி ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால், அங்கும் பேச்சுவார்த்தை இழுபறியில் சிக்கியது.
திமுக கூட்டணி
இந்த சூழலில், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கிருந்து திருவனந்தபுரம் சென்ற அவர், அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியதாகவும், அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 'பெரிய' கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி தேமுதிக நிர்வாகிகளிடையே வேகமாக பரவி, கூட்டணி முடிவு உடனடியாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தேமுதிக குழப்பம்
ஆனால், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய பிரேமலதா, கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், கூட்டணி குறித்து வெகு விரைவில் நல்ல செய்தியை சொல்வேன் என்று மட்டும் கூறினார். இதனால், தெளிவான முடிவை எதிர்பார்த்து காத்திருந்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலியில், எந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறும்? அல்லது தனித்தே போட்டியிடும் முடிவவை எடுக்குமா போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமலேயே உள்ளது.












Click it and Unblock the Notifications