“எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்”.. தேமுதிக கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல்
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமலதா பேச்சு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட ராஜ்யசபா எம்.பி பதவி தொடர்பான கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை என எடப்பாடி பழனிசாமி சொன்னார். அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். ஆனால், ராஜ்யசபா எம்.பி சீட் தொடர்பான ஒப்பந்தத்தில் தெளிவாகப் பேசிவிட்டுத்தான் கையெழுத்திட்டோம். முன்னாள் முதலமைச்சர் என்ற மாண்பின் காரணமாகத்தான் நாம் அந்த ஆதாரங்களை வெளியிடவில்லை.
எடப்பாடி முதுகில் குத்திவிட்டார்
அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். பதவி கொடுப்பார்கள் என நம்பி இருந்தோம். பெரிய மனிதர் என நம்பி நம்பி ஏமாந்தது போதும், இனியும் நாம் நம்பத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடிக்கு எப்படி கூட்டம் கூடுகிறது?
மேலும், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்பது உலகத்திற்கே தெரியும். எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு பணம், குடிப்பதற்கு மது ஆகியவற்றைக் கொடுத்து ஆள் கூட்டி வருகின்றனர். நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் மக்கள் திரண்டு வருகின்றனர், இடத்தைச் சொன்னால் போதும் மக்கள் தானாக வந்து குவிகின்றனர் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, வரும் தேர்தலில் தேமுதிகவை தேடி அனைவரும் வருவார்கள் என்றும், வரக்கூடிய தேர்தலுக்கு முன்பாக எத்தனை இடம் என்பதை எழுதிக் கொடுத்த பிறகு தான் கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா சீட் பிரச்சனை
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுகவிடம் இருந்து எப்படியாவது ஒரு மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பெற தேமுதிக முயற்சித்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது செய்த ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார்.
ஆனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தற்போதைய தேர்தலில் தேமுதிகவுக்கு எம்.பி சீட் இல்லை, அடுத்த தேர்தலில் வழங்குகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
அதையடுத்து, 2026 தேர்தலில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் தேமுதிக தரப்பு அப்செட்டில் இருந்தது. இந்தச் சூழலில் தான் கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications