ஒருவழியாக ஐ.டி விங்கை தொடங்கி கோதாவில் இறங்கியது தேமுதிக.. நிர்வாகிகளை நியமித்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவில் ஐ.டி விங் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளின் சமூக வலைதள அணிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் களத்தில் தேமுதிகவும் குதித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

தேமுதிக ஐடி விங்: இந்நிலையில், தேமுதிகவில் சமூக வலைதள அணி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூட்யூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.
தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிர்வாகிகள் இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
ஐடி விங் நிர்வாகிகள்: தேமுதிக சமூக வலைதள அணியின் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ். செந்தில்குமார், துணைச் செயலாளர்களாக ஆர். அரவிந்தன், கே.வி. மகேந்திரன், ஏ. தமிழரசன், சிவகுமார் நாகப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சியடைய பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலையொட்டி பணிகள் தீவிரம்: திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் பலவும் சமூக வலைதள அணிகளை பலமாக வைத்துள்ளன. ஐடி அணிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கட்சிக்காக தீவிரமாக களமாடி வருகின்றனர். இந்நிலையில், தாமதமாக இந்த கோதாவில் குதித்துள்ளது தேமுதிக.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதள அணியை கட்டமைத்துள்ளது தேமுதிக. தேமுதிக தற்போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.
அதைத்தொடர்ந்து, தேமுதிக நிர்வாகிகள் 3 பேர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக - தேமுதிக கூட்டணியை உறுதி செய்தனர். எனினும் இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி.. எத்தனை தொகுதி என்பது பிறகு அறிவிக்கப்படும்.. பேச்சுவார்த்தை நிறைவு!
4 சீட்?: அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி ஆகிய தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications