நம்பியவர்கள் விஜயகாந்த் முதுகில் குத்தினார்கள்.. தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம் சொன்ன பிரேமலதா
சென்னை: விஜயகாந்த் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்கள்தான் பெரிய சறுக்கலை தேமுதிகவுக்கு ஏற்படுத்தியது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த்: தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அதில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் என அனைவரும் விஜயகாந்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர் என்றார்.

எல்லோருக்கும் பிடித்தவர்: விஜயகாந்த் நடிகராக இருந்தவரை வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினோம்.
அப்போது விஜயகாந்த் எல்லாருக்கும் பொதுவானவராகவும், எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். எப்போது விஜயகாந்த் கட்சிக்கு வந்தாரோ, அத்தனை பேரும் அவருக்கு எதிராளியாக மாறுகின்ற ஒரு சூழல் வந்தது.
பெண்களுக்கு சவால்: விஜயகாந்த் அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து எதிர்நீச்சல் போட்டே திரையுலகிலும், அரசியலிலும் முன்னேறினார். அதற்கான வெற்றியை மக்களும் கொடுத்தனர். விஜயகாந்த் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். அரசியல் என்பதே சவால் தான். அரசியலில் பெண்கள் இருப்பது பெரிய சவால் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதாதான். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
ரோல் மாடல்: விஜயகாந்துக்கு எப்போதும் எம்ஜிஆர்தான் குரு, ரோல் மாடல். ஒரு பெண் தலைவராக ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல். அவருடைய கம்பீரம், தைரியம், முடிவெடுக்கும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்தும் இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். தற்போது பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கின்றனர்.
முதுகில் குத்தினார்கள்: தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 2011 வரை தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து இயங்கி வந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் அவர் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரது முதுகில் குத்திவிட்டனர் என்று சொன்ன போது அவரது குரலில் ஒருவித மாற்றம் தென்பட்டது.
தேமுதிக சறுக்கலுக்கு காரணம்: அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என உறுதியாக இருந்தார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக வாக்கு வங்கி: தேமுதிகவின் வாக்கு சதவிகிதத்தில் எந்த சரிவும் ஏற்படவில்லை. 2006ஆம் ஆண்டு கூட்டணியின்றி தேமுதிக போட்டியிட்டது. மாநில அளவில் 8.33 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அதன்பின்னர் கூட்டணியுடன் களம் கண்டதால் அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்கு சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. தேமுதிகவின் வாக்கு வங்கி நிலையாகவே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி மாதத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications