"இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்.."! விஜயகாந்த் "தோளில்" சாய்ந்து! பிரேமலதா கண்ணீர்
சென்னை: விஜயகாந்தின் 2ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது ஆளுயர சிலைக்கு மாலை அணிவித்த போது தோளில் சாய்ந்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டது காண்போரை கலங்கச் செய்தது.
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு தேமுதிக நேராக சென்று அழைப்பு விடுத்தது.

இன்றைய தினம் விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்க தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. விஜயகாந்தின் நினைவிடம் உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்குள்ள விஜயகாந்த் சமாதியிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்தியமைச்சர் எல்.முருகன், கரு நாகராஜன் உள்ளிட்டோர் வந்து மரியாதை செலுத்தினர்.
அது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிடேடோர் வருகை தந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் ஆளுயர சிலைக்கு மாலை அணிவிக்க பிரேமலதா, தனது மகன் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சென்றிருந்தார். அப்போது மூவருமாக சேர்ந்து மாலை அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் சிலையின் தோளில் பிரேமலதா சாய்ந்த போது அவரை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த இரு மகன்களுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்
ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது இரங்கல் செய்தியில் எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்புகாட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவுநாளான இன்று, அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications