கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க மாட்டோம் நாங்க! அதிமுக -பாஜகவை சூசகமாக சாடிய பிரேமலதா!
ஈரோடு கிழக்கில் தேமுதிக ஏன் தனித்துப் போட்டி என பிரேமலதா விளக்கம்
சென்னை: கலங்கிய குட்டையில் என்றுமே தாங்கள் மீன் பிடிக்க விரும்பாதவர்கள் என்றும் அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கலங்கிய குட்டை என்று சொல்கிறீர்களே, அது அதிமுக -பாஜக கூட்டணியை என்று எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் அந்த தருணத்தில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனக் கூறினார்.

தேமுதிக அலுவலகம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக அமோக வெற்றிபெறும் எனக் கூறினார். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே ஈரோட்டில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கியிருப்பதாக கூறினார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை தேமுதிகவுக்கு பரிச்சயமான தொகுதி எனத் தெரிவித்தார்.

கடலில் பேனா
கருணாநிதிக்கு கடலில் பேனா வைக்கும் முடிவை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனக் கூறிய பிரேமலதா விஜயகாந்த், பேனா அமைப்பதற்கான மதிப்பீட்டில் பள்ளிகளையும், சாலைகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியை குறை சொல்வதற்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை பார்க்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கலங்கிய குட்டை
ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது ஏன் என்பது பற்றி விளக்கமளித்த பிரேமலதா விஜயகாந்த், கலங்கிய குட்டையில் என்றுமே தாங்கள் மீன் பிடிக்க விரும்பாதவர்கள் என்றும் அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது எனவும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் அந்த தருணத்தில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.

திமுக மீது கோபம்
பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை வைத்து பார்க்கும் போது திமுக மீது அவர் கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் அதேவேளையில் அதிமுக பாஜகவையும் அவரால் முழுமையாக ஆதரிக்க முடியவில்லை என்பது கலங்கிய குட்டை என்று அவர் கூறியதிலிருந்தே அறிய முடிகிறது.












Click it and Unblock the Notifications