கல்லறை கூட காயவில்லை; அதற்குள் போராட்டமா? பிரேமலதா யோசிக்க வேண்டாமா?
திமுக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது திமுக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 2 முறை அந்தத் துக்க நிகழ்விற்குச் சென்று கலந்துகொண்டார்.

அந்தளவுக்கு திமுக நாகரிகத்துடன் நடந்துகொண்டது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, குறிப்பாக அவர் எதிர்க்கட்சிகள் மீது மிகுந்த மரியா தையைக் காட்டி வருகிறார்.
அரசியல்ரீதியாக மிகக் கடுமையாகத் தாக்கி வந்த பழ.நெடுமாறன் உடல்நிலை சரியில்லாமல் மதுரையிலிருந்தபோது வீடு தேடிச் சென்று சந்தித்தார்.
மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஸ்டாலின், அங்கே நின்றிருந்த அமமுகவைச் சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதியை காரைவிட்டு இறங்கிச் சென்று நலம் விசாரித்தார். இப்படிப் பல நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியும்.

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஒழுங்காக முடியவில்லை. அதற்கு திமுக ஆட்சிக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளது தேமுதிக. இதை அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என்கிறார்கள் பல அரசியல் விமர்சகர்கள்.
ஆகவே பத்திரிகையாளர் எஸ்பி லக்ஷ்மணனிடம் அவரது கருத்தைக் கேட்கப் பேசினோம். அவர், பிடிப் பிடி என்று பிரேமலதாவை ஒரு பிடித்துவிட்டார்.

"தமிழ்நாட்டில் உள்ள மக்கள் உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். இதுவரை தேமுதிக கூட்டணி வைத்தது இல்லை. அதிமுக உடன் இருந்தார்கள். அப்புறம் மக்கள் நலக் கூட்டணி என்று வைகோ, திருமாவளவன், ஆகிய தலைவர்களின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார்கள். பாஜக, பாமக உடன் கூட கூட்டணி அமைத்தார்கள். ஆனால், திமுகவுடன் அவர்கள் இணையவில்லை.
பெரிய அளவில் அந்தக் கட்சி சில ஆண்டுகளாக ஆக்டிவ் ஆக இல்லை. தனித்து இயங்கி வருகிறது. விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே ஸ்டாலினுடன் அரசியல் நெருக்கமாக தேமுதிக இருந்ததில்லை. அப்படிப்பட்ட விஜயகாந்த் மறைந்தபோது, தன்னுடைய மிகப் பெருந்தன்மையை ஸ்டாலின் அவர் மீது காட்டினார்.
அரசு தரப்பிலிருந்து என்னென்ன உதவிகளை எல்லாம் செய்து தர முடியுமோ அதை எல்லாம் செய்து தந்தார். இரண்டு முறை அவர் விஜயகாந்த் இறுதி நிகழ்வுக்குச் சென்றார். உதயநிதி 3 முறை சென்றார். இப்படி ஸ்டாலினும் விஜயகாந்த் மீது வைத்திருந்த நட்பைத் தனிப்பட்ட முறையில் காட்டினார். இந்த அரசும் காட்டியது.

ஆகவே திமுகவை விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்லவரவில்லை. திமுக விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியும் அல்ல. இந்த ஆட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியும் அல்ல. தாராளமாக விமர்சிக்கலாம்.
ஆனால், திமுக தொண்டர்களே விஜயகாந்த்திற்கு இவ்வளவு தூரம் செய்ய வேண்டுமா? என்று கொஞ்சம் அயர்ச்சி ஏற்படுகின்ற அளவுக்கு ஸ்டாலின் செய்திருக்கிறார். அந்தக் கல்லறையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் இந்த அறிக்கையைக் கடுமையான சொற்களால் வெளியிட்டுள்ளார்கள்.

விஜயகாந்த்தின் திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய முயற்சி என்று அந்த அறிக்கை சொல்லி இருக்கிறது. அதற்காக ஒரு பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள நிழற்குடையை உடைத்ததை எடுத்துக் காட்டியுள்ளனர். அதைத் திருப்பிக் கட்டிக் கொடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் கேட்கிறேன், விஜயகாந்த்தின் பெருமையை ஏன் ரிஷிவந்தியத்திற்குள் சுருக்குகிறீர்கள்? எதற்காக அந்த நிழற்குடைக்குக் கீழே கொண்டுபோய் விஜயகாந்த் பெருமையை வைக்கிறீர்கள்? அவரது பெருமை அதுதானா? இதுதான் பெருமை என்றால் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் நடந்துவந்த பாதி பேருக்கு அதில் சம்பந்தம் இருக்காதே? அவர்கள் வந்தது எதற்காக? விஜயகாந்த் மீது அபிமானத்தால் வந்தார்கள்.

அவருடைய புகழை ஒரு சந்துக்குள் அடைப்பதைப் போல ரிஷிவந்தியம் பஸ் ஸ்டாண்ட் நிழற்குடைக்குள் கொண்டுபோய் திணிக்கக் கூடாது. அது பெருமைப்படுத்துவது அல்ல. இவர்களே விஜயகாந்த்தைச் சிறுமைப்படுத்துகிறார்களோ என்ற சின்ன தயக்கம் எனக்குள் வருகிறது.
இதற்கு இவ்வளவு பெரிய அறிக்கை தேவையா? ஸ்டாலின் எண் பிரேமலதா விடம் உள்ளது. 'அண்ணே, இந்த மாதிரி பிரச்சினை இருக்கு' என்று பேசி இருக்கலாமே? அல்லது இன்னும் ஒரு 30 நாள்கள் கழித்து இதைத் தொடங்கலாமே?

செண்டிமெண்ட் விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய தமிழ்நாட்டில் அரசியல் செய்கின்ற நீங்கள் கொஞ்சம் நாகரிகமாக நடந்துகொண்டிருக்கலாமே?
உண்மையாகவே அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தான் உங்களின் நோக்கமாக இருந்திருந்தால் முதல்வருக்கு போன் அடித்து சொல்லி இருக்கலாம். அடுத்த நொடியே அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து என்ன செய்யவேண்டும் எனக் கேட்டுச் செய்து கொடுத்திருப்பார்களே?
இதுதான் பிரேமலதாவின் முதல் அரசியல் அறிக்கை. ஒரு பஸ் நிழற்குடைக்காகவா வரவேண்டும்? கையில் எடுக்கும் ஆயுதம் வலிமையானதாக இருக்க வேண்டாமா? இந்தப் பிரச்சினையைச் சாதாரணமாக பிரேமலதாவால் முடிக்க முடியும். அவர் தவறான ஆலோசனைக்கு ஆட்பட்டுள்ளார். வழிநடத்தப்பட்டுள்ளார்.
அவர் விஜயகாந்த் இறுதிச் சடங்கு முடிந்து பேசிய பேச்சே விமர்சனத்துக்கு உரியதாக ஆனது. திரும்பச் சொல்கிறேன். தமிழக மக்கள் உணர்வுகளை முக்கியமாகக் கவனிப்பார்கள். கணவனை இழந்த பெண்ணாகத்தான் முதலில் பிரேமலதாவைப் பார்ப்பார்கள். தேமுதிகவின் பொதுச்செயலாளராகப் பார்க்க மாட்டார்கள்.

அந்தநாளில் பிரேமலதா கணவனை இழந்த ஒரு பெண். அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். தொலைக்காட்சியில் அவரது பேச்சைக் கேட்ட பலர் 'என்னப்பா இன்றைக்கே இந்தம்மா இப்படி பேசுகிறாரே?' என்று சொன்னார்கள் என்பது நிஜம். பிரேமலதா காதுக்குக்கூட அது சென்றிருக்கும். அவர் சபதம் எடுக்கக் கூடிய நேரம் அதுவல்ல.
விஜயகாந்த்திற்குச் சற்றும் குறைவில்லாதவர்தான் பிரேமலதா. ஆனால், அந்தத் துணிச்சலைக் காட்டவேண்டிய நேரங்களில் காட்ட வேண்டிய விசயங்களில் காட்டி இருக்க வேண்டும்" என்கிறார்












Click it and Unblock the Notifications