மீண்டும் பழையபடி..! பிரேமலதா எடுத்த முக்கிய முடிவு! தேமுதிகவினருக்கு பறந்த உத்தரவு!
சென்னை: விஜயகாந்த் மறைந்து நாளையும் சரியாக 1 மாதம் நிறைவடையும் நிலையில், தேமுதிகவினருக்கு பிரேமலதா முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடியை நாளை முழுக்கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க வைக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னணித் தலைவர்கள் மறைந்தால் அந்தந்த கட்சியில் பொதுவாக 3 நாட்கள் அல்லது 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம். விஜயகாந்துக்காக அவரது கட்சியினர் 1 மாத காலம் துக்கம் அனுசரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாளைய தினம் விஜயகாந்த் நினைவிடத்தில் சில சம்பிரதாய சடங்குகளும் நடைபெறவுள்ளன. பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே தமிழகம் தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். ஏற்கனவே அவர் கிராமம் கிராமமாக தாம் பயணித்து மக்களை சந்திக்கவுள்ளதாக விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அதேபோல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான பணிகளையும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications