தேமுதிகவுக்கு 6 சீட்.. அந்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது.. சாபம் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். தேமுதிகவுக்கு 6 சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் சாபம் கொடுத்துள்ளார்.
அண்மையில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற தொகுதி பங்கீடு பட்டியல் வெளியாகியது. அதன்படி அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக மற்றும் பாமக 23 தொகுதிகளிலும், தேமுதிக மற்றும் அமமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், ஓபிஎஸ் மற்றும் ஜிகே வாசன் ஆகியோருக்கு தலா 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் ஆகியோரின் சந்திப்புக்கு இடையே இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தேமுதிக இன்னும் எந்தக் கூட்டணி என்பதையே முடிவு செய்யவில்லை. ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கூட்டணியை பற்றி தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். எங்களின் நிலைப்பாடு என்ன என்பதை மாநாட்டில் கூறுவோம். தேமுதிக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கூட்டணி தொடர்பான முடிவை எடுப்போம்.
எந்தக் கட்சி சார்பாக இப்படியான தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியானதோ, இதுவே அந்தக் கட்சிக்கு அழிவுக் காலத்தை உண்டாக்கும். அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தான் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். எப்போது எங்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தினார்களோ, அப்போதே எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்துவிட்டது.
இதனை அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா? இதற்கு பதில் சொல்ல வேண்டும். சும்மா அப்படியே தட்டிவிட்டு செல்லக் கூடாது. தேமுதிக என்ற கட்சிக்காக ஏராளமானோர் உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications