ராஜ்யசபா எம்.பி சீட் கிடைக்குமா? இல்லையா? கட்டையைப் போட்ட எடப்பாடி.. பிரேமலதாவின் கடுகடு ரியாக்ஷன்!
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் ஒதுக்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த ரியாக்ஷன் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவ அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்ட , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் அதிமுக ஆதரவுடன் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 62 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 1 இடமும் கிடைக்கும். அதிமுகவுக்கு மற்றொரு சீட் கிடைக்க வேண்டுமென்றால் பாமக, பாஜக அல்லது ஓ.பன்னீர்செல்வத்தின் தயவு தேவை.
இந்நிலையில் தான் ஒரு ராஜ்யசபா சீட்டை தேமுதிக கேட்டு வருகிறது. தேமுதிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்க்கொண்டது. அப்போது தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "யார் சொன்னது? அதிமுக ஒரு சீட் தரும் என்று சொன்னதா? தேர்தல் உடன்படிக்கையை படித்துவிட்டு வந்து பேசுங்கள்" என்று பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுக - தேமுதிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜூலை மாதம் வரை அமைதியாக இருக்கும்படி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார். கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு தே.மு.தி.க மகளிர் அணியினருடன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும், மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருந்தலும் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உள்ளது. தமிழக அரசும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை, தேமுதிக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது. அன்னை மொழி காப்போம்; அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டன் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். அதேபோல அனைத்து மொழியையும் கற்க வேண்டும்.
மத்திய அரசு இதுவரை தொகுதி சீரமைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தரவில்லை. 40 எம்பி தொகுதியை குறைப்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தராதால் அது பற்றி நிறைய பேச ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் தொகுதிகளை குறைக்கும் படி மத்திய அரசு செயல்பட்டால், தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். தொகுதி சீரமைப்பில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை தேமுதிக ஏற்காது எனத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் பிரேமலதா. இதனால் அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது போல் ஜூலை மாதம் வரை பிரேமலதா விஜயகாந்த் அமைதி காக்கப் போகிறாரா அல்லது வேறு முடிவை எடுக்கப்போகிறாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications