சென்னையில் தஞ்சமடைந்த கோவா காங். எம்.எல்.ஏக்கள்.. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போட ரிட்டர்ன்!
சென்னை/பனாஜி: பாஜகவால் பேரம் பேசி வளைக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் சென்னையில் தஞ்சமடைந்திருந்த கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பனாஜி திரும்பினர்.
நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலானது நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சட்டசபை செயலகங்களில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட எம்.பிக்கள், மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இத்தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலை முன்வைத்தும் கோவா அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. கோவாவில் காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏக்களை பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை தொடக்கம் முதலே முறியடித்து.
திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் போன எம்.எல்.ஏக்களை தேடி கண்டுபிடித்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வைத்தது. மேலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட மாஜி முதல்வர் மீதும் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.
இருந்தபோதும் பாஜகவிடம் இருந்து தமது எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையில் 5 பேரை சென்னையில் தங்க வைத்தது காங்கிரஸ். சென்னையில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவரது ஏற்பாட்டில் 2 நாட்கள் 5 கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 5 எம்.எல்.ஏக்களும் சென்னையில் இருந்து கோவா சென்றடைந்தனர்.