மின்கட்டண உயர்வு.. பொங்கி எழுந்த அதிமுக.. ஜூலை 25ல் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்- எடப்பாடி
சென்னை: திமுக அரசின் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டை கண்டித்து ஜூலை 25ல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நேற்று மின்கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கட்டண உயர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக கண்டனம்
திமுக அரசின் இத்தகை நடவடிக்கை என்பது மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்த உள்ளது. இதனால் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோல் சொத்து வரி உயர்வை போல் மின்கட்டண உயர்வுக்கும் அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நான்கு பக்கமும் இடி
மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. இந்த திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கை்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

தவறும் திமுக அரசு
மக்களை காப்பாற்றவதற்காக அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசின் ஆட்சியாளர்கள் மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகின்றனார். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும் மாற்று கருத்து தெரிவிப்பவர்களையும் ‛இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்' என்று காராகிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் இந்த திமுக அரசு மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறுகிறது.

துறை வாரிய வரி-கட்டண உயர்வு
2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்யும்போது வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு தற்போது துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது உள்பட மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால் மக்கள் பரிதவிக்கின்றனர்.

ஜூலை 25ல் ஆர்ப்பாட்டம்
இவ்வாறு பாதிக்கப்படும் அப்பாவி மக்களை இந்த கொடுங்கோல் ஆட்சியின் கொடூர கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை பொறுத்தமட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும் ஜூலை 25 காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications