தவெக பரம்பரையில் ஒரு எம்.பி.. சூட்டோடு சூடாக அடித்த 'ஜாக்பாட்’.. ராஜ்யசபா MP ஆகப்போவது யார்?
சென்னை: ராஜ்யசபா எம்.பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால், அந்த இடத்தை நிரப்ப வரும் ஜூன் 18 ஆம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 107 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள தவெகவுக்கு முதல் எம்.பி கிடைக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக சார்பில் முதல் எம்.பி ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சி.வி.சண்முகம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த இடம் காலியாகியுள்ளது. மயிலம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த பதவிக்காலம் 2028 வரை இருப்பதால், தற்போது அதற்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் இருந்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மட்டுமே இந்த ராஜ்யசபா எம்.பியை (மாநிலங்களவை உறுப்பினர்) சுலபமாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பலம்
மாநிலங்களவை இடைத்தேர்தலில் பொதுமக்களுக்குப் பதிலாக, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி கட்சிகளின் பலம்:
தவெக: 107 இடங்கள் (தனிப்பெரும் கட்சி)
திமுக: 59 இடங்கள்
அதிமுக: 47 இடங்கள்
இடைத்தேர்தல் விதிமுறை (Single Vacancy Rule)
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது ஒரே ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல். ஒரே ஒரு இடத்திற்குத் தேர்தல் நடக்கும்போது, சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்தக் கூட்டணிக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு (50% மேல்) இருக்கிறதோ, அவர்களது வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடியும்.
தற்போது தவெக-வுக்கு தனித்து 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மேலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 119 வருகிறது. தவெக தலைமையிலான அரசுக்கு எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பும் ஆதரவு அளித்துள்ளதால் அதன் பலம் 144 ஆக உயர்கிறது.
தவெகவுக்கு ஜாக்பாட்
இதனால், எதிர்க்கட்சிகளான திமுக-வோ அல்லது அதிமுக-வோ தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும், தவெக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துவது சாத்தியமில்லை. எனவே, ஜூன் 18-ல் நடக்கவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகள் பெற்றோ புதிய ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
யாருக்கு சீட்?
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ், தவெக செய்தி தொடர்பாளர் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக சார்பில் முதல் முறையாக எம்.பி ஆகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவெகவுக்கு எம்.பியாகும் வாய்ப்பு 2028ஆம் ஆண்டுதான் கிடைத்திருக்கும். சிவி சண்முகத்தின் ராஜினாமா காரணமாக விரைவாகவே, எம்.பி ஆகும் வாய்ப்பு கனிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications