பயணிகள் ஏக்கம் நிறைவேறுது.. தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்.. தேதி குறிச்சாச்சு!
சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோன்று மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.
அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் முதன் முதலாக இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிவேகம், சொகுசான இருக்கைகள், முழுவதும் ஏசி வசதி, பயோ டாய்லட், ஆட்டோமெட்டிக் டோர், சாய்வு இருக்கைகள் என வந்தே பாரத் ரயில்களில் சொகுசு வசதிகள் இருந்ததால் இந்த ரயில்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தற்போது நாடு முழுக்க சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - பெங்களூர், சென்னை - கோவை, சென்னை- நெல்லை, கோவை - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. சாதாரண ரயில்களை விட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் பயண இலக்கை அடைந்து விடுகிறது. இதே பிற விரைவு ரெயில்களில் சென்றால் கூடுதலாக இரண்டு மணி நேரம் பிடிக்கும். பேருந்தில் செல்வது என்றால் கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மத்தியில் இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இதன் காரணமாக சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். அதன்படி, சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்ததாகவும், ஜூன் மாதம் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்க்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் மோடியின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். காணொலி காட்சி வாயிலாக ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோல், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் கோடை விடுமுறையின் போது இயக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்த நிலையில், வரும் 31 ஆம் தேதியில் இருந்து பயணிகளின் இந்த கனவு நனவாக போகிறது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல, மதுரையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் உள்பட பலருக்கும் சொந்த ஊர் வந்து செல்ல இந்த ரயில் சேவை வசதியாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications