தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அலர்ட் ஆகும் அரசியல் களம்
சென்னை: ராமேஸ்வரம், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாதயாத்திரை பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பாரத பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் பிசியில் உள்ள பிரதமர் மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரத்தில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடி, குலசேகரப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு நேரில் அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த பாதயாத்திரையின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு முதல் முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications