பிப்., 26ம் தேதி ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பது உண்மையா? 'எக்ஸ்க்ளூசிவ்' அப்டேட்
சென்னை: வரும் பிப்.26ம் தேதி ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று வெளியான தகவல் குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 29ம் தேதி, 'நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை' என்கிற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
கொரோனா பரவிவரும் சூழலில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
சங்கடப்படுத்த வேண்டாம்
இதன் பின்னர் ரசிகர்கள் திரளாக சென்னையில் போராட்டம் நடத்திய போது, ரசிகர்களின் இந்த செயல்பாடுகளால் 'மனவேதனை' அடைவதாக கூறி அறிக்கை வெளியிட்ட ரஜினி, மீண்டும் அரசியலுக்கு அழைத்து சங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
நோ அரசியல்
அந்த சம்பவத்திற்கு பிறகு முழு ஓய்வில் இருந்து வந்த ரஜினியை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் ரஜினியை சந்தித்தது குறித்து விளக்கமளித்த கமல், 'ரஜினியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.
ரசிகர்கள் ஆவல்
இந்த நிலையில், வரும் பிப்.26-ம் தேதி ரஜினிகாந்த்- லதா தம்பதியரின் 40-வது திருமண ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ரஜினி ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா, குறைந்தபட்சம் தங்களுக்கு ஏதாவது செய்தி கூறுவாரா என்று ரசிகர்கள் இப்போதும் ஆவலுடன் உள்ளனர்.
ரஜினி பெயரில் ஹால்
இந்த நிலையில் தான், வருகிற 26-ம் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பிப்.25 மற்றும் 26 ஆகிய இரண்டு தேதிகளில் ரஜினிகாந்த் பெயரில் ஹால் புக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மீண்டும் தனது நிலைப்பாடு குறித்தும், இன்னும் சில முக்கிய தகவல்களையும் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி ஏதுமில்லை
எனினும், நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ ரியாஸ் அவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், "ரஜினி செய்தியாளர்களை சந்திக்கிறாரா என்பது குறித்து இப்போது வரை எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனக்கும் எந்த தகவலும் ரஜினி தரப்பில் இருந்து வரவில்லை" என்று கூறியுள்ளார்.