சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கத்தில் இரவில் நீண்ட நேரம் மின்தடை.. பொதுமக்கள் ஆவேசம்
சென்னை: சென்னையில் நேற்று இரவு மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், அம்பத்தூர் பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேடவாக்கம் புஷ்பா நகர், பாபு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அதேபோல் ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்ததால், கடுமையான வெக்கையின் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மின்தடை குறித்து புகார் அளிப்பதற்காக பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் முறையான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நேரடியாக மேடவாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு விசாரித்தபோது, பணியில் ஊழியர்கள் யாரும் இல்லாததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கை குழந்தையுடன் ஈபி அலுவலகம் முன்பு வந்த பெண் மின்சாரம் இல்லாததால் குழந்தை தூங்க முடியாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினர்
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தின் முன்பு திரண்டு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இதே நிலை இருப்பதாக குற்றச்சாட்டினார்கள். மேடவாக்கம் மட்டுமின்றி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் நேற்று மின்தடையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி விளக்கம் அளித்த மின்சார வாரியம், மடிப்பாக்கம் 33 கி.வி துணை மின் நிலையத்திற்கு (SS), பள்ளிக்கரணையில் இருந்து வரும் 33 கி.வி மின் ஆதார மின்மாற்றி பழுதடைந்ததால் ஏற்கனவே தடைபட்டிருந்தது. மேலும், பெரும்பாக்கத்திலிருந்து வரும் 33 kv மின் பாதையிலும் இரவு 21.45 மணியளவில் பழுது ஏற்பட்டதால் மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின் பாதையில் இருந்த பழுது கண்டறியப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, நள்ளிரவு 1.00 மணியளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications