சொத்துக்கள் விற்பனை பத்திரம், நில ஆவணங்கள்.. ரூ-80 லட்சம் வீட்டு மனை? மக்களுக்கு தமிழக அரசு அறிவுரை
சென்னை: சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள், விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது
தமிழகத்தை பொறுத்தவரை, சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, போலி பத்திரங்களை தயார் செய்து, அச்சுஅசல் நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன.. அதனால்தான், இதுபோன்ற மோசடிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் தமிழக பதிவுத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்வோர்கள் மீது, கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.. இதில் லஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து வருகிறது.
அதேபோல, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, கள ஆய்வுகளையும் மேற்கொள்கிறது.. இதன்ஒரு பகுதியாக, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இவ்வளவு கடிவாளங்களை தமிழக அரசு போட்டும்கூட, மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நேற்றைய தினமும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 4 நபர்கள் கைதாகியிருக்கிறார்கள். இதுகுறித்த விவரத்தை காவல்துறை செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
வீட்டுவசதி வாரியம்: இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் சி.பிரசாத் என்பவர் முகப்பேர் மேற்கு திட்டத்தில் குறைந்த வருவாய் பிரிவு-1, மனை எண்.7/861-ல் உள்ள சொத்தை பொய்யான ஆவணங்கள் தயார் செய்து எதிரிகள் அபகரித்ததாக கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு LFIW பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், உத்தரவுப்படி மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகாவின் மேற்பார்வையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட துரை பாண்டியன், ஜெகதீசன், தனலட்சுமி மற்றும் நவீன் ராஜ் ஆகியோரை கைது செய்து ஜனவரி 29ம் தேதி அன்று நீதித்துறை நடுவர், சிசிபி மற்றும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆவணங்கள்: சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது" என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications