ஒட்டிக்கொண்டு இருப்பது என் இயல்பு அல்ல.. ஐடி விங் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பிடிஆர் பரபர விளக்கம்
சென்னை: திமுகவின் ஐடி விங் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தது ஏன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவரின் பணிச்சுமை கருதி தற்போது மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி என்ற பிரிவு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மீண்டும் என்ட்ரி ஆகும் ராஜு... எப்போது என விளக்கம்
மாற்றம்
இந்த நிலையில் சமீபத்தில் அவரின் பணிகள் சரியில்லாத காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கோரிக்கை விடுத்ததாக இணையத்தில் சில செய்திகள் உலவி வந்தன. அமைச்சர் தனது இலாக்காவில் கவனம் செலுத்துவதால் ஐடி விங்கில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று திமுக தலைமைக்கு புகார்கள் சென்றதாகவும் இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் உலவி வந்தன. இந்த நிலையில் தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
விவாதம்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென இப்படி ராஜினாமா செய்தது திமுக கட்சி வட்டாரத்தில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. திமுக ஐடி விங்கின் செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தாலும், சமீபத்தில் இணையத்தில் பிடிஆர் தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகள் காரணமாகவும், இணையத்தில் அவர் கோபமாக சில விஷயங்களை பேசியதன் காரணமாக அவர் இப்படி நீக்கப்பட்டு இருக்கிறாரோ என்ற கேள்விகள் கூட அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இது பற்றி பல அரசியல் வியூகங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
பிடிஆர் ராஜினாமா ஏன்?
இந்த நிலையில் திமுகவின் ஐடி விங் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தது ஏன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், அமைச்சர் பொறுப்புடன் கட்சி பொறுப்பையும் என்னால் கவனிக்க முடியவில்லை. இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பது சிரமமாக இருந்தது. அதனால் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன். ஒரு பணியை செய்தால் முழு அர்ப்பணிப்போடு செய்ய முடியும்.
பிடிஆர் விளக்கம்
அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சி பதவியிலும் முழு அர்ப்பணிப்போடு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு பெருமைக்காக ஒரு பதவியில் இருக்க முடியாது . பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது அரசியல் இயல்பு அல்ல. அதனால் நான் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்ள முடிவு செய்தேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.