காசு பார்க்கும் ஜக்கி வாசுதேவ்.. விளம்பரப் பேர்வழி.. விளாசி தள்ளும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறுவது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிதான் என்று விமர்சனம் செய்துள்ளார், தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த சில வருடங்களாக இந்து கோவில்களை பக்தர்களிடம் தர வேண்டும், அரசு நிர்வகிக்க கூடாது என்பது போன்ற கோரிக்கைகள் பாஜக ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தின், நிறுவனர் ஜக்கி வாசுதேவ், "கோவில்களை காப்போம்" என்ற பெயரில் கோஷத்தை முன் வைத்து தொடர் கோரிக்கைகளை எழுப்பி வந்தார்.
இந்த வருடம் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற, சிவராத்திரி விழாவின்போது, அங்கு வந்திருந்த பக்தர்கள் இந்த கோரிக்கைகள் எழுதிய, பதாகைகளை உயர்த்தி பிடித்து ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜக்கி வாசுதேவ் இந்த கோரிக்கை பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில்தான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள, நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முட்டாள்தனமானது. இதுபோல கோரிக்கை விடுபவர்கள் இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்.. ஜக்கி வாசுதேவ் ட்வீட்- ரஜினிக்கு #
ஜக்கி வாசுதேவ் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர் ஒரு விளம்பர பிரியர். இந்த பிரச்சினையை கிளப்பி பணம் சம்பாதிக்க அவர் மற்றொரு வழியை தேடுகிறார். கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் கடவுளை மட்டுமே கும்பிடும் ஒருவர், கடவுளை பிரதானமாக நினைக்கும் ஒருவர், சிவராத்திரி விழாவிற்கு 5 லட்சம், 50 ஆயிரம் மற்றும் 5000 விலையில் எப்படி டிக்கெட் விற்பனை செய்ய முடியும்?
ஆன்மீகம் என்பதற்கு இதுதான் அர்த்தமா? ஜக்கி வாசுதேவ் ஒரு வணிக செயல்பாட்டாளர். கடவுள் மற்றும் மதம் ஆகியவற்றை அதற்கு உதவுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈஷா யோகா மையத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சிஏஜி அறிக்கையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதை நானும் கவனித்துள்ளேன். சிஏஜி அறிக்கையிலுள்ள அம்சங்களை நான் பரிசீலிக்க உள்ளேன். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.