தீங்கு நேர்ந்துவிட்டது.. வருத்தமாக இருக்கிறது.. ட்வீட்டரில் கவலைப்பட்ட பிடிஆர்.. யாரை சொல்கிறார்?
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்டரில் செய்துள்ள சில ட்வீட்கள் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை திடீரென மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திடீர் இடமாற்றம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
பல வழக்கறிஞர்கள் இந்த இடமாற்றத்தை எதிர்த்தனர். இதையடுத்து பிரிவு உபச்சார விழாவில் கூட பங்கேற்காமல் நீதிபதி சந்தீப் பானர்ஜி மேகாலயா புறப்பட்டார். அதோடு, என்னால் அதிகார ஆதிக்கத்தை முழுமையாக உடைக்க முடியவில்லை என்றும் கூட தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்துள்ள ட்வீட்டில் இந்த இடமாற்றம் குறித்து கவலைப்பட்டுள்ளார். அதில், பொதுவாக எதிர்மறையான விஷயங்களை நான் நேர்மையாக எதிர்கொள்வேன். பாசிடிவ் விஷயங்களில் கவனம் செலுத்தி, முன்னேற்றம் செய்ய வாய்ப்பு உள்ள இடங்களில் கவனம் செலுத்துவேன். எதிர்மறை விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டேன். ஆனால் நான் இங்கே ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இடமாற்றம்
சமீபத்தில் சென்னையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் எனக்கு கவலையை அளிக்கிறது. நம்முடைய அரசு அமைப்புகளுக்கு சரி செய்ய முடியாத தீங்கு ஏற்பட்டதை எண்ணி கவலை ஏற்பட்டுள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன்.. இந்தியாவில் ஏற்கனவே நிறைய அரசு அமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுவிட்டது.

விதி
மக்கள் எப்படிப்பட்ட அரசை தேர்வு செய்கிறார்களோ அப்படிப்பட்ட எதிர்வினைகளைத்தான் அவர்கள் பெறுவார்கள். அவர்களே தங்களின் சொந்த விதியை தேர்வு செய்கிறார்கள். அரிய திறமை, நேர்மை, நல்ல பார்வை, பணி நெறிமுறை ஆகியவற்றில் நாம் இழப்பை சந்தித்து வருகிறோம். இதற்காக நான் வருந்துகிறேன், என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அழுத்தம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை பிடிஆர் இப்படி வருத்தத்தோடு பதிவு செய்துள்ளார். நல்ல பெயர் எடுத்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின் அழுத்தங்கள் இருக்கலாம் என்று பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நீதிபதி சந்தீப் பானர்ஜி பழி வாங்கப்பட்டுவிட்டதாகவும் நிறைய விவாதங்கள் உலவி வந்தன.

கடிதம்
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். 10 மாதம் மட்டுமே ஆன நிலையில் தலைமை நீதிபதியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அந்த நீதிபதி மீது குற்றபுகார், முறைகேடு புகார் எதுவும் உள்ளதா? எதனால் இந்த திடீர் மாற்றம்? பெரிய நீதிமன்றத்தில் இருக்கும் தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது ஏன்?

என்ன காரணம்
இந்த பணியிட மாற்றம் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. இதற்கு வெளிப்புற அழுத்தம் ஏதாவது காரணமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இது மிகப்பெரிய இழப்பு, அரசு அமைப்புகளுக்கு தீங்கு நேர்ந்துவிட்டது என்று கூறி கவலைப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications