10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு! பொதுமக்கள் தவிப்பு! ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: பேருந்துகள், மளிகைக்கடைகள் என பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை அரசால் அங்கீகரிக்கப்பட்டவை என எத்தனையோ முறை இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டும் அறியாமையால் பல இடங்களில் இந்த அவலம் நீடிக்கிறது.
இதனிடையே 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்பதையும் அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கடுமையான முறையில் மீண்டும் ஒரு முறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எங்களுக்கு அட்வைஸ் பண்ற வேலை வேண்டாம்! ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
10 ரூபாய் நாணயங்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிசர்வ் வங்கியால் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 10 ரூபாய் நாணயத்தின் புழக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. காரணம் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி மக்கள் மத்தியில் பரவியதே ஆகும். இதன் காரணமாக தான் பேருந்துகள், மளிகைக் கடைகள், என பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
அறியாமை தான் காரணம்
இதில் கொடுமை என்னவென்றால் தனியார் பேருந்துகள், நிறுவனங்களில் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கிறார்கள் என்றால் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள், என அரசு நிறுவனங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க முன்வருவதில்லை. இதற்கு காரணம் 10 ரூபாய் நாணயத்தை பற்றிய அறியாமை தான். 10 ரூபாய் நாணயம் செல்லும் என எத்தனையோ முறை அறிவிப்புகள் வெளியிட்டும் அது இன்னும் பரவலாக மக்கள் மத்தியில் சென்று சேர்வதில்லை.
கோவை மாவட்டம்
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் இந்தப் பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் தான் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதனிடையே தற்போதை சூழலில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்பதையும் அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கடுமையான முறையில் மீண்டும் ஒரு முறை அறிவுறுத்த வேண்டும்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இதேபோல் 10 ரூபாய் நாணயத்தை மையமாக வைத்து வலம் வரும் வதந்திகளுக்கும் ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வங்கிகளும் இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.