"நான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது.." அமைச்சர் பிடிஆர் விளக்கம்
சென்னை: நான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் திமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்த ஆடியோ வெட்டி ஒட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று பரவி வந்தது. இது தொடர்பான ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

சமூக வலைத்தளங்களில் இந்த ஆடியோக்கள் சில தரப்பினர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளும் உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை முன்வைத்து கடும் விமர்சனங்களை வைத்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்" என்று டிவிட்டரில் சாடியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளர். மேலும் திமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெட்டி ஒட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் இரண்டு பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், நான் பேசியதாக பரப்பப்படும் இந்த ஆடியோக்கள் தீயநோக்கத்துடன் ஜோடிக்கப்பட்டவை என்றும் தொழில் நுட்பத்தின் உதவியால் யார் வேண்டும் என்றாலும் இதுபோன்ற ஒரு ஆடியோவை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடியோ கிளிப்பின் தடயவியல் ஆய்வு குறித்த ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் தொடர்ந்து கூறுகையில், இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு போதும் பதில் அளிப்பது இல்லை, ஆனால் இந்த முறை பதில் அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. தார்மீக கொள்கைகள் எதுவும் இல்லாத நேர்மையற்ற அரசியல்வாதிகளால் இந்த ஆடியோ திரும்ப திரும்ப பரப்பி பெரிது படுத்தப்பட்டு விட்டது.
பொதுவெளியில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த தொழில்நுட்ப ஆய்வு மூலம் இந்த ஆடியோ உண்மைத்தன்மை கொண்டது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கும் திறன்களை கொண்டு வரும் நாட்களில் இதுபோன்ற பல ஆடியோக்கள், வீடியோக்கள் தீய நோக்கத்துடன் வெளியிடப்படலாம். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. நம்மை பிளவுபடுத்தும் இதுபோன்ற எந்த ஒரு தீய முயற்சிகளும் பலனளிக்காது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications