பனையூர் வீட்டிற்கு நேரடியாக வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி.. நடிகர் விஜய் உடன் மீட்டிங்.. என்ன காரணம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய்யைப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பல முனை போட்டி
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளைத் தாண்டி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம்
ஏனென்றால், கடந்த அக். மாதம் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு, 129 இடங்களில் வென்றனர். இது பல அரசியல் கட்சிகளின் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகமாகும். கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்ற போதிலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தது அதுவே முதல்முறையாகும்.

தேர்தல் பணிகள்
ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் குறிப்பிடத் தகுந்த அளவு வெற்றியைப் பெறுவார்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தேர்தல் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார். வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரத்தைத் தொடங்க உள்ளனர்.

திடீர் சந்திப்பு
தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிந்த நிலையில், வீட்டில், நடிகர் விஜய்யைப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications