புதுச்சேரி டூ சென்னை: மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிரடி ஆய்வு.. இன்று அந்த முக்கிய முடிவு?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் தமிழகத்தில் தங்களது நேரடி ஆய்வினைத் தொடங்கியுள்ளனர்..
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று தமிழகம் வந்தடைந்தனர்..

நேற்று மதியம் சென்னை வந்த அவர்கள், முதலில் புதுச்சேரிக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..
இன்று ஆலோசனை
புதுச்சேரியில் இரவு தங்கிய இக்குழுவினர், இன்று காலை மீண்டும் சென்னைக்குத் திரும்பினர்.. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் (எம்.ஆர்.சி. நகர்) பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் இக்குழுவினர், இன்றும் நாளையும் பல்வேறு தரப்பினருடன் மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்துகிறார்கள்,
இன்றைய ஆலோசனையின் தொடக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தேர்தல் ஆணையக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசுகின்றனர்..
அப்போது தேர்தல் தேதி, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் அவர்கள் கேட்டறிகின்றனர்..
பணப்புழக்கம் - பணப்பரிவர்த்தனை
இதனைத் தொடர்ந்து மாலையில் தமிழக தலைமைச் செயலர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்க உள்ளனர்.. குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது..
இன்று நடைபெறும் ஆலோசனையில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய அரசின் 23 பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.. தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன..
இறுதி வழிகாட்டுதல்கள்
இதற்கிடையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. முன்னதாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு தற்போது 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆகக் குறைந்துள்ளது..
வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளதால் தமிழக அரசியல் களம் பெரும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.. இக்குழுவினர் தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு 27-ம் தேதி அதாவது நாளை மாலை டெல்லி திரும்ப உள்ளனர்.. அதன் பின்னரே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு தேர்தல் ஆணையம் இறுதி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளது.












Click it and Unblock the Notifications