இதோட நிறுத்திக்கங்க.. சவால் விட்டா நான் களத்துல இறங்குவேன்! ரொம்ப கேவலமா போயிடும்! சீறும் புகழேந்தி!
எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணக்கம் ஏற்படாத சூழலிலும் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறச் செய்ய என்ன காரணம் என்று விளக்குகிறார் புகழேந்தி.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே, அதிமுக பரபரத்து வந்தது. எடப்பாடிக்கு எதிராக தனது உரிமையை நிலைநாட்டும் களத்தை ஓபிஎஸ் விட்டுத்தரமாட்டார் எனக் கருதப்பட்டு வந்த சூழலில், திடீரென ஓபிஎஸ் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறச் செய்தது அனைவருக்கும் 'ஷாக்' கொடுத்தது. ஓபிஎஸ் இப்படி அதிரடி முடிவெடுக்க என்ன காரணம் என்பது பற்றியும், எடப்பாடி தரப்பினரின் பேச்சு பற்றியும் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கியுள்ளார் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி.
எடப்பாடி தரப்பு போட்டியிட களமிறங்கியதுமே, தங்கள் அணியும் போட்டியிடும் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ஓபிஎஸ். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் நியமித்தார்.
இரட்டை இலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, மனம் மாறிய ஓபிஎஸ், தனது அணி வேட்பாளரை வாபஸ் பெறச் செய்தார். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணக்கம் ஏற்படாத சூழலிலும் ஓபிஎஸ் இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம்? சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி. இனி அவரது பேட்டி..

வாபஸ் பெற உண்மையான காரணம்
கேள்வி : ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற உண்மையில் என்ன காரணம்?
பதில் : நாங்கள் வேட்பாளரை நிறுத்தினோம். வேட்பாளரை வாபஸ் பெறமாட்டோம் என்று சொன்னோம். களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை ஆற்றினோம். துரதிருஷ்டவசமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இப்படியாக வந்தது. தேர்தல் ஆணையம், இடைக்கால பொதுச் செயலாளர் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கவில்லை எனச் சொன்ன பிறகும், நாங்கள் எந்த பொதுக்குழுவை எதிர்த்தோமோ, நாங்கள் யாரை அவைத்தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னோமோ அவரிடமே பொறுப்பு கொடுக்கப்பட்டு, அவர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னால் எப்படி? தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டியவர், யாரெல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டு, அவர்கள் அனைவரின் பெயரையும் பொதுக்குழுவிடம் சொல்லி வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் சொன்ன எதையும் மதிக்காமல் செயல்பட்டிருக்கிறார் அவைத்தலைவர்.

அவப்பெயர்
நடுவராக இருக்க வேண்டிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்துக்கு செல்லும்போது எங்கள் அரசியல் எதிரியாக இருக்கக்கூடிய சி.வி.சண்முகத்தை அழைத்துக்கொண்டு செல்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஒருவர் இப்படி நடந்து கொள்கிறார். இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றாலும், வேட்பு மனு தாக்கல் இறுதியை நெருங்கிவிட்டதால், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. இப்போது நாங்கள் போராடி, இரட்டை இலை சின்னம் முடங்கிவிட்டால் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படும். இந்த விவகாரம் இடையீட்டு மனுவில் வந்த இடைக்கால உத்தரவுதான். பிரதான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. இந்த ஒரு தேர்தலில் மல்லுக்கட்டி, இரட்டை இலையை சின்னாபின்னப்படுத்திய பழிக்கு ஆளாக வேண்டும் என்றுதான் வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவை எடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இடையீட்டால் இடையூறு
கேள்வி : முந்தைய பேட்டியின்போது, "ஒரு தேர்தல் வரட்டும், தொண்டர்கள் பலம் யாருக்கு இருக்கிறது என்று தெரியும்" என்று சொன்னீர்கள்.. இப்போது தேர்தலும் வந்துவிட்டது. தொண்டர்கள் பலத்தை நிரூபிக்காமல் பின்வாங்கி விட்டீர்களே?
பதில் : நாங்கள் தேர்தல் களத்தில் நின்றுவிட்டோம். பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது சொன்னார். "நிற்பது நிற்பதுதான்.. 10 வாக்குகள் கிடைத்தாலும் பரவாயில்லை" என்று சொன்னார். ஓபிஎஸ் உட்பட அனைவருமே தேர்தலைச் சந்திக்க களமிறங்கிவிட்டோம். வேட்பாளரையும் அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டோம். இந்த சுப்ரீம் கோர்ட் 4 நாட்களுக்கு முன்பு வந்து இப்படி சொல்லப்போகிறது என நாங்க எதிர்பார்க்கவில்லை. இது எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவால் ஏற்பட்ட இடையூறு தான். எங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது அமையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு மட்டும் வராமல் இருந்தால் நிச்சயம் நாங்கள் போட்டியிட்டிருப்போம். இரட்டை இலை சின்னத்தையும் கொடுத்துவிட்டோம். அவர்களின் வேட்பாளர் களத்தில் நிற்கிறார். முயற்சி செய்து ஜெயித்து வரட்டும். யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துகள்.

கடைசி உரிமையையும்
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தனக்கு இருந்த கடைசி உரிமையையும் விட்டுக்கொடுத்து விட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில் : எங்களுக்கான கடைசி உரிமையையும், எங்களுக்கான கடைசி ஆணையையும் வருகிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் சொல்லவேண்டும். வருகிற தேர்தல் முடிவும், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பும் தான் எதிர்காலத்தில் அதிமுகவை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்று வழிகாட்டப் போகிறது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் நின்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறாரா என்பதை அந்த உச்ச நீதிமன்றமும் கவனிக்கத்தான் போகிறது. விட்டுக்கொடுத்திருக்கிறோம், கெட்டுப்போக மாட்டோம். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் இன்னும் போராடியிருக்க முடியும். ஆனால், திரும்பத் திரும்ப தொல்லை செய்து கொண்டிருந்தால், அடுத்து வரப்போகும் தீர்ப்பு கூட குந்தகமாக அமைந்துவிடும்.

நீதிமன்ற அவமதிப்பு
கேள்வி : நீங்கள் சொல்கிறபடி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தானே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி இருக்கிறார்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கலாமே? ஏன் அதைக் கைவிட்டீர்கள்?
பதில் : நூற்றுக்கு நூற்று ஒரு சதவீதம் அவர்கள் அவைத்தலைவர் எனச் சொல்லும் தமிழ்மகன் உசேன் செய்தது நீதிமன்ற அவமதிப்பு தான். நிச்சயமாக நாங்கள் வழக்கு தொடர்வோம். இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தாலும் கூட அதைத்தொடர்ந்து நிறைய செயல்முறைகள் உள்ளன. எப்போது விசாரணைக்கு வரும், எப்போது தீர்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. இதனால், இந்த இடைத்தேர்தலுக்குள் எந்த முடிவும் வந்திருக்காது.

ரொம்ப கேவலமா போயிடும்
கேள்வி : ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த செம்மலை, ஆதரவு கொடுக்கிறோம் என்ற பெயரில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள், ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் ஓபிஎஸ் வரவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறாரே?
பதில் : அதிமுக தொண்டர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். தன்மான உணர்வு கொண்டவர்கள். இனி அதுபோன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினால், நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நானே களத்தில் இறங்கி எதிராகப் பிரச்சாரம் செய்யக்கூடிய சூழல் வரும். நாங்கள் விட்டுக்கொடுத்ததை ஏற்றுக்கொண்டு ஓபிஎஸ்ஸை சந்தித்து நன்றி தெரிவித்து, பிரச்சாரம் செய்ய அழைத்திருந்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு சவால் விட்டால் அப்புறம் புகழேந்தி களத்தில் இறங்க வேண்டியிருக்கும். பிறகு வேறு மாதிரி சென்று முடிந்துவிடும். என்னை யாரும் தடுக்கவே முடியாது. யார் சொன்னாலும் ஓபிஎஸ்ஸே சொன்னாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது. நம்பிக்கை துரோகிகளை பிரச்சாரக் களத்தில் விளாசுவேன். பிறகு தேர்தல் முடிவு ரொம்பக் கேவலமாகப் போய்விடும்.

நான் இறங்குவேன்
கேள்வி : இப்போது நீங்களே ஓ.பன்னீர்செல்வம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தானே உங்கள் பேச்சு தெரிகிறது?
பதில் : உச்ச நீதிமன்றம், எங்கள் எதிரியையே நடுவராக நியமனம் செய்து அவர் நடுநிலையாக வாக்கெடுப்பை நடத்துவார் என்று சொன்னால், அவர் ஒரு வேட்பாளர் பெயரை மட்டும் குறிப்பிட்டு கடிதம் அனுப்புகிறார்கள். எங்கள் அணியைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு கடிதம் மிக தாமதமாகவே கிடைத்தது. பலருக்கு கடிதமே கிடைக்கவில்லை. உயர்ந்த மனதோடு விட்டுக்கொடுத்த ஓபிஸ்ஸையே விமர்சித்தால், அவர் விட்டுக்கொடுத்தாலும், நான் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இறங்குவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னமான இரட்டை இலைக்காகவெல்லாம் பார்க்கமாட்டேன். இரட்டை இலை சின்னத்தை ஏற்கனவே தொடர்ச்சியாக தோற்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications