புரட்டாசி புரட்டி போட்டுருச்சே.. தமிழ்நாட்டில் சல்லுன்னு ஏறிய காய்கறிகள் விலை..ஆயுத பூஜை வேற வருதே?
சென்னை: தமிழகத்தில் காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான வரத்து போதுமான அளவுக்கு இல்லாமல் உள்ளது.. இதன்காரணமாக, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சந்தைகளில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே, தக்காளி வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.. தக்காளி விலை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதுவே சில்லரை கடைகளில் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது..

வெங்காயம்: இதுபோலவே, 2 மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100ஐ தொட்டுவிட்டது.
இதற்கு காரணம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி கொடுத்ததால், இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வெங்காயம், தக்காளி இவைகளின் விலை இனியும் உயரக்கூடும் என்று கலங்கி சொல்கிறார்கள் வியாபாரிகள்.
கூட்டுறவு சொசைட்டி: எனினும், நம்முடைய தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன... ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆனால், இவை இரண்டுமே, ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது...
சில்லறை கடைகளை விட சரிபாதி அளவுக்கு அரசு கூட்டுறவு சங்கமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் விலை குறைந்து காணப்படுவதால் ஏராளமான மக்கள், வெங்காயம், தக்காளியை அதிகமாக வாங்கி செல்கிறார்கள்.
நீலகிரி: வெங்காயம், தக்காளியை தவிர, மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. எனினும், தேவை அதிகமாக உள்ளதால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
வட மாநிலங்களில் மழையால் சில வெங்காயம், உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழகத்திற்கு குறைந்த அளவு காய்கறிகள் தான் விற்பனைக்கு வருகின்றன.. மேலும், தற்போது புரட்டாசி மாதம் நடப்பதால், பலரும் சைவ உணவையே அதிகம் சமைக்கிறார்கள். இதனால் காய்கறிகளின் தேவையும் அதிகமாக எழுந்துள்ளதும், விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்..
வாகன வாடகை: அதேபோல, சுங்க கட்டண உயர்வால், வாகன வாடகை அதிகரித்துள்ளதும், காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்... இதைத்தவிர, மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, லாபம் போன்றவற்றையும் வியாபாரிகள் கணக்கில் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆயுத பூஜையும் நெருங்கிவிட்டதால், இந்த காய்கறிகளின் விலை உயர்வு அதிகரித்தே காணப்படுகிறது.
காய்கறிகள் மொத்த விலை நிலவரம் இன்று இதுதான்: 1 கிலோ புடலங்காய் - 15 - 20, சுரைக்காய் - 15 - 20, பீர்க்கங்காய் - 25 - 35, பீட்ரூட் - 30 - 35, பாகற்காய் - 30 - 35, கொத்தவரை - 30 - 35, கோவக்காய் - 30 - 35, கோஸ் - 30 - 40, நுாக்கல் - 30 - 40, வெண்டைக்காய் - 35 - 40, சவ்சவ் - 35 - 45, கத்தரிக்காய் - 35 - 50க்கு விற்பனையாகிறது.
காய்கறிகள்: அவரைக்காய் - 40 - 50, சேப்பங்கிழங்கு - 40 - 50, உருளைக் கிழங்கு - 40 - 50, குடை மிளகாய் - 45 - 55, தேங்காய் - 50 - 55, பச்சை மிளகாய் - 50 - 60, சேனைக் கிழங்கு - 60 - 65, பெரிய வெங்காயம் - 60 - 70, சிறிய வெங்காயம் - 60 - 70, கேரட் - 60 - 70, முருங்கைக்காய் - 70 - 80, தக்காளி - 80 - 90, மாங்காய் - 90 - 100, பீன்ஸ் - 110 - 120, எலுமிச்சை - 130 - 140, இஞ்சி - 150 - 160, பச்சை பட்டாணி - 200 - 230 வரை விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications