பாஜகவுக்கு “டபுள் ஷாக்”.. கூட்டணியிலிருந்து விலகிய மற்றொரு கட்சி! அதிமுக தலைமையில் கூட்டணியாமே
சென்னை: பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இருக்கும் என பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்து உள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகளும் பாஜக பின்னால் சென்றுவிடும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் அதற்கு மாற்றாக முடிவை அறிவித்து உள்ளார் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி#ADMK #PBK @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu pic.twitter.com/3bQ1RNom81
— M.Jagan Moorthy (@jaganmoorthy_m) September 26, 2023
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.
அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்..!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications